‘என்ன சார் உங்க பிரச்சனை’.. ஆபத்தான முறையில் சிறுமியை அமர வைத்து பயணம் ; பள்ளி வாகன ஓட்டுநரின் அலட்சியம்!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 2:24 pm
Quick Share

கோவை ; சிறுமியை ஆபத்தான முறையில் அமர வைத்து பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் அலட்சியம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான வகையில் பள்ளி வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதை முறையாக கடைபிடிப்பதில்லை.

குறிப்பாக, தனியார் வாகனங்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள் பலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதற்கு உதாரணமாக கோயம்புத்தூர் கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளையம் சந்திப்பு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு மிக அருகே ஜன்னல் ஓரமாக நான்கு வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை அமரச் செய்து ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் பொதுமக்களால் படம் பிடிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என ஓட்டுனரிடம் எச்சரித்த போதும், புகார் கொடுங்கள் என தைரியமாக அவர் பேசும் காட்சியும் உள்ளது.

பொறுப்பற்ற முறையில் பள்ளி வாகனங்களை இயக்கம் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது போல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும்.

Views: - 146

0

0