தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை.. மகளை எரித்து சாம்பலே கிடைக்காமல் செய்த பெண் வீட்டார் : இப்படி ஒரு சாதி வெறியா?!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 1:44 pm
honor Killing
Quick Share

தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை.. மகளை எரித்து சாம்பலே கிடைக்காமல் செய்த பெண் வீட்டார் : இப்படி ஒரு சாதி வெறியா?!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன். அவர் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பது இருவருக்கும் முதலில் தெரியாது.

திருப்பூரில் இருவருக்கு ஏற்பட்ட பழக்கம் நட்பாகி பின்னர் காதலாக மலர்ந்தது. இந்த காதல் வெகுவேகமாக வளர்ந்தது. இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

குறிப்பாக பெண்ணின் வீட்டார், இடைநிலை ஆதிக்க சாதியை சேர்ந்தவர் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஐஸ்வர்யாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.

ஒரே ஊரில் மாப்பிள்ளையை மிக தீவிரமாக தேடி வந்தனர். மேலும் ஐஸ்வர்யாவை திருப்பூரில் இருந்து உடனே சொந்த ஊருக்கு வரும்படி கட்டளையும் இட்டனர்

ஆபத்தை உணர்ந்த ஐஸ்வர்யா தனது காதலன் நவீனிடம் இதை கூறியுள்ளார். இதனால் அடுத்தக்கட்ட முடிவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், டிசம்பர் 31ஆம் தேதி இருவரும் திருமணம் செய்தனர்.

மேலும் அந்த திருமண குறித்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனே திருப்பூருக்கு சென்று போலீசாரிடம் மத்தியசம் பேசி பெண்ணை அழைத்து வந்துள்ளனர்.

ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்த வந்து அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், வெளியே செல்ல முடியாதவாறு வீட்டுக்காவலில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 3ஆம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் சடலத்தை சுடுகாட்டில் எரித்து பெண் வீட்டார் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இதையடுத்து நவீன் தனது மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக அந்த கிராம மக்களும் ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆனது என தெரியாமல் சந்தேகத்தை கிளப்பியது மட்டுமல்லாமல், ஒன்றாக சேர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் பேசி புகாரும் அளித்துள்ளனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலில் போலீசார் விசரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில் பெண் வீட்டாரே எரித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது.

மேலும் சாம்பல் கூட நவீனுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக சுடுகாட்டில் அதை கழுவி அகற்றியுள்ளனர். இதனிடையே நவீனுக்கு அவரது நண்பர்கள் மூலம், எங்க பொண்ணை நாங்க கொன்னுட்டோம் என்ற தகவலை கூறியுள்ளனர்.

விசாரணையில் இறங்கயி போலீசார்இ, இது ஆணவக் கொலையா என விசாரித்து ஐஸ்வர்யாவின் தாய் மற்றும் தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் நவீனுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் கட்சி எதுவும் வாய் திறக்காதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி சமூக நீதி என பேசும் ஆளும் கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இதுவரை இந்த விஷயம் குறித்து வாய்திறக்காதது ஏன் என சமூகஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Views: - 400

0

0