சீமான் போன்றோர்கள் பொது வாழ்க்கையில் இருப்பது தமிழக நலனுக்கு மிகப்பெரிய கேடு : சீறும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 4:37 pm
CPR - Updatenews360
Quick Share

கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை, பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு ஜாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள்.

காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கின்றது. இவர்கள் இன்னும் 1952 இல் இருப்பதாக நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

பாரம்பரியமும் அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசு கருத்தைச் செலுத்துவதும் கவனத்தை செலுத்துவதும் திமுகவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது.

ஒட்டு மொத்தத்தில் திமுக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எத்தனை முறை திராவிட முன்னேற்ற கழக அரசு விளம்பரப்படுத்திருக்கிறது? அடிக்கடி குழந்தை என்பது அன்னையர் நலத்திற்கு கேடு; அது போல் அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும்.

ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.

நல்ல வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் அடிக்கடி தேர்தல் வருகின்ற பொழுது பல்வேறு விதமான சமாதானங்களை செய்கின்ற நிலைக்கு அரசியல் தலைமை தள்ளப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது.

திராவிட முன்னேற்றக் கழகம் பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு பணத்தை எதிர்பார்க்காத நல்ல ஆளுநர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை.

தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட ஆளுநர் கிடைத்திருக்கிறார். அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டார்கள் என்பதற்காக நீட்டை அமல்படுத்த முடியுமா? முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை ஆளுநர் மீது போடுகிறீர்கள்.ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்பது நமக்கு சர்வாதிகாரத்தை தந்துவிடாது.

எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் ஆளுநர் கையெழுத்திட முடியும்.
சனாதான தர்மத்தை ஒழிப்பேன் என்பது திமுக ஒழிய போகிறது என்பதை காட்டுகிறது.

ஏழை மக்களின் நிலையை கண்டு பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே 200 ரூபாய் கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அம்பானியையும் அதானியையும் உருவாக்கியதே காங்கிரஸ்தான். சீமானை போன்றவர்களுக்கெல்லாம் சமுதாயத்தின் மீது எங்கே இருக்கிறது அக்கறை? இஸ்லாமியர்களை விடுதலை செய்ய சொல்கிறார்களா? இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுதலை செய்ய சொல்கிறார்களா? இது கூட வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பொது வாழ்க்கையில் இருப்பது தமிழகத்தின் நலனுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கேடு.

நாம் விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வருகிறோம். அந்த வளர்ச்சி மேலும் மேலும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை.பாஜக விற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. இந்த கருத்து முற்றிலுமான அரசியல் கருத்து.

அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் ,ஜே பி நட்டாவுக்கும் தெரியும். அதை சொல்வதற்கு நான் வேண்டியதில்லை.அதை சொல்வதற்கு அண்ணாமலை இருக்கிறார் என தெரிவித்தார்.

Views: - 194

0

0