காவிரி ஆற்றில் இறங்கி திடீர் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. குண்டுகட்டாக தூக்கிய காவல்துறையினர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 12:49 pm
Trichy Farmers - Updatenews360
Quick Share

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அனை கட்டும் போக்கை கர்நாடக அரசு முற்றிலும் கைவிட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் நெல்லுக்கு கூடுதல் விலையை தரவேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் பல்வேறு விவசாயிகளுக்கான கோரிக்கைகளை முன் நிறுத்தி கடந்த 10 நாட்களாக அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 11 நாளான இன்று விவசாயிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திடீரென திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றிற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை மேலே அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அனுமதியின்றி காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அய்யாகண்ணு, 30 லட்சம் சாகுபடி செய்த தமிழகம் இன்று 5 லட்சம் ஏக்கர் கூட சாகுபடி பண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியமும் மாதம் தோறும் 177 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆனால் உரிய நேரத்தில் கர்நாடகா அரசு தண்ணீர் திறப்பதில்லை.

இதுவரை மூன்று டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து உள்ளது – தமிழக அமைச்சர் துரைமுருகன் கேட்டால் மத்திய அமைச்சர் கூறுகிறார் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என எதற்கு உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சம் தீர்க்க பார்க்கிறது – காவிரி டெல்டா எல்லாம் பாலைவனம் ஆகிவிடும்.

முதலமைச்சர் சுப்ரீம் கோர்ட் சென்று வழக்கு தொடுக்க வேண்டும் நாங்கள் வழக்கு தொடுத்தாலும் அது இரண்டு மாநில பிரச்சினை என நீதிமன்றம் சொல்கிறது எனவே தான் இன்று காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம் – ஆனால் எங்களை காவல் துறையினர் கைது செய்து விட்டனர்.

Views: - 230

0

0