பச்சை நிறமாக மாறிய தூத்துக்குடி கடல்… மீன்கள் செத்துவிடும் என மீனவர்கள் அச்சம்… ஆய்வு செய்யும் குழு..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 10:35 am
Quick Share

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் கடல் பச்சை நிறமாக மாறியது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துறைமுக கடற்கரை பூங்கா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று துறைமுக பூங்கா பகுதியில் Noctiluca என்ற வகை கடல்பாசி அதிகமாக அளவில் கடலில் கலந்ததையடுத்து கடல் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதுபோன்று பாசியின் தாக்கத்தால் கடல் பச்சை நிறமாக மாறினால் மீன்கள் உயிரிழந்து விடும் என்று மீனவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மீனவர் தரப்பில் விசாரித்த போது, கடலில் கலக்கப்படும் கழிவு நீரில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களால் இந்த வகை பாசி திடீரென அபரிவிதமாக வளர்ச்சி அடைந்து இதுபோன்று கடலில் ஒதுங்கும். கடல் நீர் ஓட்டத்திற்கு ஏற்ப இந்த பாசியானது நகர்ந்து விடும். ஒருவேளை கடல் நீர் நகர முடியாத கோணத்தில் கடற்கரை பரப்பு இருந்தால் இந்த பச்சை நிற பாசி சில நாட்கள் அந்த பகுதியிலேயே தேங்கி நிற்க வாய்ப்பு உள்ளது.

இப்படி பாசி படர்ந்த கடல் நீர் தேங்கினால் சில தினங்களில் அப்பகுதியில் மீன்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவம் இங்கு நடந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த பச்சை நிற கடல் நீரை மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளது.

Views: - 383

0

0