திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்… செத்து மிதக்கும் மீன்கள்… தூத்துக்குடி மீனவ மக்கள் அச்சம்..!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 4:32 pm

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென சுமார் 30 அடி தூரம் கடல் உள்வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பீச் ரோட்டில் ரோச் பூங்கா பகுதியில் சுமார் 50 பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இன்று கடல் சுமார் 30 அடி தூரம் உள்வாங்கியது.

இதன் காரணமாக கடலின் தரை வெளியே தென்பட்டது. அதில் இருக்கும் சிறிய மீன்கள் மற்றும் இறால்களை கொக்கு, நாரை பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கொத்திச் சென்றது. இதனால், அப்பகுதி மீனவ மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், “வழக்கமாக, அமாவாசை பௌர்ணமி தினங்களில் தூத்துக்குடியில் பல இடங்களில் சுமார் இரண்டடி முதல் ஐந்து அடி தூரம் வரை கடல் உள்வாங்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக சுமார் 30 அடி தூரம் கடல் உள்வாங்கியுள்ளது ஏன் என்று தெரியவில்லை,” என்றனர்.

மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் கடல் பகுதிகளில் அலைகளின் சீற்றம் காணப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் மட்டும் கடல் உள்வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?