‘அவங்க மட்டும்தான் ஓட்டு போட்டாங்களா..? நாங்க போடலையா..?’ ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் கொந்தளிப்பு..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 9:50 am
Quick Share

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டமானது தலைவர் சாந்தாமணி தலைமையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பெண்கள், தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்ட தொகையான ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஊராட்சி நிர்வாகம் அதற்கு சரியான நடவடிக்கை இல்லை என கூறி ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நடைமுறை சிக்கலினால் தாமதமாகி வருவதாகவும், கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 272

0

0