சினிமாவை மிஞ்சிய சம்பவம்… புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 4:54 pm
Quick Share

புழல் சிறையில் இருந்து தப்பி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை பாதுகாப்பாக புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு. அவரது மகள் ஜெயந்தி (வயது 32). இவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடிப்பெயர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாலை சுமார் ஐந்து மணியளவில் புழல் சிறை வளாகத்தில் பொதுமக்கள் கைதிகளை பார்க்கச் செல்லும் அறை வழியாக ஜெயந்தி அங்கிருந்து வெளியே தப்பி ஓடி உள்ளார்.சிறை வளாகத்தில் தினமும் காலை, மாலை ஆட்கள் கணக்கெடுக்கும் பணி வழக்கமாக கொண்டிருந்த வேளையில், அங்கு ஜெயந்தியை காணாத பெண் போலீசார் இது குறித்து புழல் சிறை அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சிறை அலுவலர்கள் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து ஜெயந்தியை சிறை வளாகம் முழுவதும் தேடியதில் அவர் பொதுமக்கள் மனு கொடுத்து கைதிகளை பார்க்கும் அறை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையில் பெங்களூர் பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்ய சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் பாதுகாப்புகள் மிகுந்த புழல் சிறையில் இருந்து பெண் சிறைவாசி தப்பி ஓடிய சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜெயந்தியை உதவி ஆய்வாளர் மணி தலைமையில் உதவி ஜெய்லர் லிங்குசாமி தலைமையில் மூன்று சிறை காவலர்கள் கர்நாடகாவில் தேடுதல் வேட்டையை நடத்தியது. போலீசார் மற்றும் வனத்துறையினருடன் தேடிய போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை பாதுகாப்பாக புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Views: - 252

0

0