17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… சீரழித்த பிறகு விபச்சாரத்தில் தள்ளிவிட்ட பத்திரிக்கையாளர் ; இரு பெண்கள் உள்பட 3 பேர் போக்சோவில் கைது!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 2:31 pm
Quick Share

திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்கள் போக்சோ, விபச்சார தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வந்த தகவலின்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவாது மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் (40) என்பவரும், திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜாபானு (50) என்பவரும் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும், அச்சிறுமியை அச்சுறுத்தி மேற்படி பிரபின் கிறிஸ்டல்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ, விபச்சார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தும், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனங்களில் நிருபராக வேலை பார்த்து, தற்போது “சிலந்தி வலை” என்ற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும், மேற்படி ரமீஜாபானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும் மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இக்குற்ற செயல்களுக்கு மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செல்லம்மாள் (50) உடந்தை என்பது தெரியவந்தது. மேற்படி மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தொடர் விசாரணையில், சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் பாலமுருகன் (29) என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் பாலமுருகனின் பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைத்ததும், அச்சிறுமியுடன் பாலமுருகன் கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபட்டதும், பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், அவரது பெற்றோர்கள் வாங்கிய கடனுக்காக ரமீஜாபானுவிடம் வேலைக்கு அனுப்பியதாகவும், அச்சிறுமியை ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல் ராஜும் சேர்ந்து கொண்டு ஏமாற்றி, கட்டாயய்பபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரமீஜாபானு, செல்லம்மாள், பிரபின்கிறிஸ்டல் ராஜும் ஆகிய மூவரும் நீதிபதி இல்லத்தில் நேர் நிறுத்தப்பட்டு பின்னர் ரமீஜாபானு, செல்லம்மாள் ஆகிய இருவரும் மகளிர் சிறைச்சாலையிலும், பிரபின்கிறிஸ்டல் ராஜும் திருச்சி மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் மகன் பாலமுருகன் மற்றும் திருச்சி மாவட்டம், துவாக்குடி மலையை சேர்ந்த தங்கவேல் என்பவரது மனைவி நித்தியா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 386

0

0