டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்கள் திருட்டு… நள்ளிரவில் கைவரிசை… போலீசார் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 9:27 pm
Quick Share

திருச்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்கள் திருடிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மருதம்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையின் மேற்பார்வையாளர் பெருமாள் பணிகள் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று கடையை திறப்பதற்காக அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் பெருமாள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து துணை ஆய்வாளர் ராதா தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரத்து 500 பணம் மற்றும் 2 உயர் ரக குவாட்டர் மது பாட்டில்களையும் திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 323

0

0