வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திமுக ஆட்சியில் வரவே வராதா? RTIல் வெளியான அதிர்ச்சி தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 9:02 pm
Vellalore Bus Stand -Updatenews360
Quick Share

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திமுக ஆட்சியில் வரவே வராதா? RTIல் வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல்&டி பை பாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழு 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 65 % பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.

இந்த நிலையில் மீண்டும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு சார்பாக கோவை மாநகராட்சி ஆணையருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

மேலும் பொது மக்களின்‌ பங்களிப்புடன்‌ நடத்தக்கூடிய நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பஸ்‌ ஸ்டாண்ட்‌ கட்டுமான பணிகளை நிறைவேற்றி பயன்பாட்டு குகொண்டு வரலாம். இல்லாவிட்டால்‌ பஸ்‌ ஸ்டாண்ட்‌ மீட்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில்‌ நிதி திரட்டி கட்டுமான பொருட்களை பெற்று தர தயாராக இருக்கிறோம்‌. அதன்‌ மூலமாக மீதமுள்ள பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்‌ என யோசனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்பு கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2 வருடங்களாக கோவை மாநகராட்சி, வெள்ளலர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த அறிக்கையும் இதுவரை தமிழக அரசுக்கு அனுப்பவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 01.01.2022 முதல் 27.09.2023 வரை எந்த அறிக்கையும் அரசுக்கு அனுப்பவில்லை என தெரியவந்துள்ளதால் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 432

1

0