திடீரென பிரேக் பிடித்த லாரி… சினிமா காட்சிகளைப் போல அடுத்தடுத்து மோதிய கார்கள் ; ஷாக் சிசிடிவி காட்சி..!!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 1:34 pm
Quick Share

வேலூர் ; காட்பாடி அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சிலக் மில் பகுதியில் நேற்று ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி திருச்சியை சேர்ந்த முபாரக் அலி, பூந்தமல்லியை சேர்ந்த ஸ்ரீதர், மேலும் ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர், ஆகியோரின் மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது.

இதனையடுத்து, முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென மெதுவாகச் சென்று பிரேக் அடித்ததால், பின்னால் வந்த மூன்று கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக கார்களில் பயணித்த யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக காட்பாடி வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கார்கள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 263

2

0