வலசை பாதை அடைக்கப்பட்டதால் தடுமாறிய பாகுபலி… சாலையில் நின்று தவித்த காட்டு யானை… கண்கலங்க வைத்த காட்சிகள்!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 9:28 am
Quick Share

மேட்டுப்பாளையத்தில் சமயபுரம் கிராமத்தில் யானையின் வலசை பாதை அடைக்கப்பட்டதால் போக வழியின்றி சாலையில் நடுவே நின்று தவித்த காட்டு யானை பாகுபலியின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் கிராமத்தின் அருகே நெல்லி மலை வனப்பகுதி உள்ளது. நீண்ட காலமாக இந்த வனப் பகுதி காட்டு யானை பாகுபலியின் இருப்பிடமாக இருந்து வருகிறது. இந்த காட்டு யானை தினமும் நெல்லி மலை வனத்திலிருந்து கல்லார் வனப்பகுதிக்கு இடம்பெயர்வது என்பது தினசரி நிகழ்வாகவே நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பாகுபலி என பெயரிட்டுள்ள காட்டு யானை, மாலை வேளையில் நெல்லி மலை வனத்திலிருந்து கல்லார் வனத்திற்கு செல்லும். பின்னர் விடியற்காலை கல்லார் வனத்திலிருந்து மீண்டும் தனது இருப்பிடமான நெல்லிமலை வனத்துக்கு திரும்பும் இப்படியான இந்த இடப்பெயர்வு நடைபெறக்கூடிய பகுதியாக சமயபுரம் கிராம சாலை மற்றும் அதன் அருகில் இருக்கக்கூடிய தனியார் பட்டா நிலங்கள் யானையின் வலசை பாதையாக இருந்து வந்தது.

மேலும் படிக்க: திருமண நிகழ்ச்சி விருந்து சாப்பாடு… ஆசை தீர சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி ; கடலூரில் பரபரப்பு!!!

இந்த நிலையில், சமயபுரம் கிராமத்தின் அருகே யானை சென்று வரும் தனியார் பட்டா இடத்தில் தற்பொழுது வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக காட்டு யானை பாகுபலி பயன்படுத்தி வந்த வலசைப் பாதை கடந்த சில தினங்களாக அடைக்கப்பட்டு உள்ளதால் யானை இடம்பெயர் என்பது சிக்கலாக உள்ளது.

எப்போதும் தான் வலசை செல்லும் இடத்தை விட்டு மாற்று பாதையில் செல்ல காட்டு யானை பாகுபலி இடத்தை தேர்வு செய்ய முடியாமல், மீண்டும் மீண்டும் தனது வழக்கமான வலசை பகுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கு வேலி உள்ளதால் சோகத்துடன் திரும்புகிறது. மேலும் யானையின் வலசை தடைபடுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல நெல்லி மலை காட்டிலிருந்து கல்லார் வனத்துக்கு செல்ல முயன்ற காட்டு யானை பாகுபலி சமயபுரம் கிராம சாலையின் வழியாக சென்று, தனது வழக்கமான வலசை பாதையில் செல்லலாம் என்ற போது அங்கு வேலை இருப்பதை பார்த்து எங்கு செல்வது என தெரியாமல் அதே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது.

ஒரு கட்டத்தில் சாலையின் நடுவே நின்று மிக நீண்ட யோசனையை மனதில் வைத்து அங்கேயே நின்று விட்டது. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்ப கிராம சாலையின் வழியாகவே வெகு தூரம் நடந்து சென்றது. இதனை அடுத்து அருகில் இருந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் யானையை மீண்டும் கல்லார் வனப்பகுதிக்கு வலசைக்கு விட அருகில் இருக்கக்கூடிய மற்றொரு இடத்தில் அதனை விரட்ட முயன்றனர். பின்னர் ஒரு வழியாக அந்த யானை அங்கு இருந்து கல்லார் சென்றது.

காட்டு யானைகளை பொருத்தவரை ஆண்டாண்டு காலமாக தனது வலசைப் பாதையை நன்கு ஞாபகம் வைக்கக்கூடிய திறன் வாய்ந்த பெரிய உயிரினம். அவ்வளவு எளிதில் வலசை பாதைகளை மாற்றும் குணாதிசயம் இல்லாத அந்த யானை, தற்பொழுது தனது வலசை பாதையை அடைத்து விட்டதால், அந்த இடத்திற்கு தினமும் சென்று தனது வழி உள்ளதா..? என பார்க்கக்கூடிய வீடியோ காட்சியாக இந்த காட்சி பதிவாகியுள்ளது.

இதனை பார்க்கும் போது பாகுபலியின் வலசைப் பாதை மறைக்கப்பட்டுள்ளதை காட்டுவதால், யானை ஊருக்குள் நுழைந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் நாட்களில் காட்டு யானை பாகுபலியை அதன் கடந்த கால வலசை பாதைகளில் மீண்டும் பயணிக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 137

0

0

Leave a Reply