மணல் குவாரிகளை தொடர்ந்து கல் குவாரிகளில் ரெய்டு நடத்தப்படுமா..? அதிர வைக்கும் ராயல்டி ஸ்லிப் மோசடி.. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2023, 6:10 pm
Quarry - Updatenews360
Quick Share

வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில், சுமார் 5000 கோடியளவிற்கு போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறையின் இந்த தகவலை தொடர்ந்து, வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி துறைகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போய்விட்டது.
கனிம வளங்களை சுரண்டி தமிழகத்தை சீரழிக்கும் இந்த சட்டவிரோத கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதிகாரிகளின் துணையோடு ராயல்டி ஸ்லிப்பை வைத்து புரோக்கர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரிகளில் இருந்து ஜல்லி, போல்டர் கற்கள், கிராவல் மண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டுமானால், அந்தந்த மாவட்ட கனிம வள உதவி இயக்குநரிடம் இருந்து ராயல்டி ஸ்லிப்பை கட்டாயம் பெற வேண்டும்.

இப்படியிருக்கையில், குவாரிகளுக்கு தொடர்பே இல்லாத சில புரோக்கர்கள், ராயல்டி ஸ்லிப்பை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளின் உதவி இல்லாமல் இந்த ராயல்டி ஸ்லிப் எப்படி புரோக்கர்களின் கைகளுக்கு சென்றது என்று அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக ராயல்டி தொகை வசூல் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு எர்த்மூவர் உரிமையாளர் நலச் சங்கம் புகார் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகரகம்‌ மற்றும்‌ புறநகர பகுதிகளில்‌ கட்டுமான பணி நடைபெறும் இடங்களில்‌ இருந்து அஸ்திவாரம்,‌ பேஸ்மட்டம்‌ பணிகளுக்கு எர்த்‌ ஒர்க்‌ செய்த மண்ணை வெளியில்‌ எடுத்து செல்வதற்கும்‌, அதன்‌ பிறகு திரும்ப ரீபில்லிங்‌ செய்வதற்கும்‌ ராயல்டி தொகை இரண்டு முறை எந்த ரசீதும்‌ இல்லாமல்‌ அடாவடியாக வகூலிக்கிறார்கள்‌.

மேலும், அனுமதி உள்ள குவாரிகளில்‌ இருந்து உரிமம்‌ சீட்டுடன்‌ மண்‌ அள்ளும்போது, யூனிட்டுக்கு 500 வீதம்‌, புதுக்கோட்டை எஸ்‌ஆர்‌ குரூப்பைச்‌ சேர்ந்த செல்வம்‌ (9943607541), மாரியப்பன்‌ (94421 44406), பாலமுருகன்‌ (98428 43313) என்பவர்கள்‌ அடியாட்கள்‌ மூலம்‌ எங்கள்‌ லாரிகளை தடுத்து நிறுத்தி ராயல்டி என்ற பெயரில்‌ பணம்‌ வசூலிக்கின்றனர்.

ராயல்டி தரவில்லை என்றால் லாரியைஎ பிடித்து காவல்துறையில்‌ ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்கின்றனர். தினம் தோறும் பல லட்ச ரூபாய் வசூல் செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக எங்கள் வாகனத்திற்கு மாதத்தவணை கட்ட முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் நலிவடைந்து வருகிறது.

இதனால், கட்டுமானப் பொறியாளர்களும், அரசு ஒப்பந்ததாரர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, ராயல்டி என்கிற பெயரில் பணம் வசூலிக்கும் முறையை நீக்கி மண் எடுப்பதற்கு உரிமம் சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி, உரிய அனுமதி வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 335

1

0