3வதும் பெண் குழந்தை… விவாகரத்து கேட்டு கணவர் டார்ச்சர் ; குழந்தைகளுடன் ஆட்சியரிடம் புகார் அளித்த பெண்..!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 9:59 pm
Quick Share

தூத்துக்குடியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த நபர், மூன்றும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை விவாகரத்து கேட்டு மிரட்டிய சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். மகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெப கிருபா என்ற பெண்ணை மணந்து, அவரை விவகாரத்து செய்துள்ளார். இதை அடுத்து முதல் திருமணத்தை மறைத்து, நடுவ குறிச்சியை சேர்ந்த அன்னமணி என்ற பெண்ணை, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக அண்ண மணி கருத்தரித்த போது மகராஜன் அன்னமணியை கருவை கலைக்க சொல்லி கருக்கலைப்பு மாத்திரையை வழங்கி அதை தின்று கருக்கலைப்பு செய்யசொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார் இதை தொடர்ந்து அன்ன மணி தனது தாய் வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சென்ற நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை அடுத்து மகாராஜன் அன்ன மணிக்கு ஆண் வாரிசு இல்லாமல், மூன்றும் பெண் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கூறி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆனால், அன்ன மணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவாகரத்து வழக்கில் கையெழுத்திடாமல் உள்ளார். இதை அடுத்து மகாராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னமணியை ஒழுங்காக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடு, நாங்கள் மகாராஜனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க உள்ளோம். இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம், என கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அன்னமணி தனது கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளுடன் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து தனது கணவர் மகாராஜன் தன்னை ஏமாற்றி முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையிலும், தனக்கு ஆண் வாரிசு இல்லை என்று தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார்.

தற்போது விவாகரத்து வழக்கில் தனக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார் என்றும், மேலும் என்னிடம் விவாகரத்து பெற்றுவிட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயல்வதாக கண்ணீர் மல்க கூறிய அன்னமணி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் தலையிட்டு தனது புகார் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Views: - 246

0

0