உலக மண் தினம்: தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சம் மரங்களை நட்ட காவேரி கூக்குரல் இயக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 2:03 pm
Isha
Quick Share

உலக மண் தினம் மற்றும் நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

இதற்காக, டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, தஞ்சாவூர், விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 100 இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்மூலம், சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், “கடந்த 50, 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் விவசாய முறைகளால், மண்ணின் கரிம சத்தின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. ஒரு வளமான மண்ணின் அங்கக கரிமத்தின் அளவு 3-6 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக விவசாய நிலங்களில் 0.5 முதல் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளது. மேலும், விவசாயம் செய்வதற்கு அத்தியாவசியமாக விளங்கும் மேல் மண்ணின் அளவும் குறைந்து வருகிறது. ஒரு அங்குல மேல் மண் உருவாவதற்கு பல நூற்றாடுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

எனவே, அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, உலக நாடுகளின் சட்டங்களிலும், கொள்கை முடிவுகளிலும் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக துபாயில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் சத்குரு அவர்களும், ஈஷாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றும் மண் வளப் பாதுகாப்பு குறித்து பல்வேறு அமர்வுகளில் பேசி வருகின்றனர்.

இயற்கை விவசாயம் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் மண் வளப் பாதுகாப்புக்கு ஒரு தீர்வாக உள்ளதால் மர விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுத்து வருகிறது. விவசாய நிலங்களிலும், வரப்போரங்களிலும் மரங்களை நடுவது மண் வள பாதுகாப்புக்கு ஒரு தீர்வாகும். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற டிம்பர் மரங்களை நிலம் முழுவதுமாகவோ அல்லது வரப்போரங்களில் மட்டுமோ வளர்க்க இயலும், இதன்மூலம் விவசாயிகள் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தையும் பெற முடியும்.

ஈஷா இதுவரை ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 73 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. மரக்கன்றுகள் பெறவும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

Views: - 131

0

0