திமுக தலைமையுடன் மோதிய கணவர்… கட்சியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி… துணை பொதுச்செயலாளர் பதவிக்கு முட்டி மோதும் மூவர்..!!

Author: Babu Lakshmanan
20 September 2022, 1:52 pm
Quick Share

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிய நிலையில், அவரது பதவியை பிடிக்க 3 பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு திமுகவில் புதிய பொறுப்புகளும், பதவி மாற்றங்களும் நடைபெற்ற போது, திமுக துணை பொதுச் செயலாளர்களாக சுப்புலட்சுமி ஜெகதீசன், பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி ஆ ராசா ஆகிய இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். எனவே திமுக துணை பொதுச் செயலாளர்கள் 5 ஆக உயர்ந்தது.

திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவிகளில் 5ல் ஒரு பெண்ணை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் விதியாகும். எனவே, கருணாநிதியின் ஆட்சியின் போது முக்கிய பிரமுகராக திகழ்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே, தமிழக அரசின் ஒரு துறையிலாவது ஊழல் இல்லாததைக் காண்பித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று தடபுடலான அறிவிப்பை வெளியிட்டு திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன். மேலும், மின்கட்டணத்தை உயர்த்தியதையும் நேரடியாகவே விமர்சித்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுகவிலிருந்தும் அரசியில் இருந்தும் விலகுவதாக திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி அறிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதமே விலகல் கடிதத்தை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் திமுகவின் அடுத்த துணை பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் விதிப்படி, சுப்புலட்சுமியின் இடத்தை மற்றொரு பெண் தான் நிரப்ப வேண்டும் என்பதால், கனிமொழி, கீதா ஜீவன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரில் ஒருவரை தலைமை நியமிக்கக் கூடும் என தெரிகிறது.

Kanimozhi - Updatenews360

துணை பொதுச் செயலாளர் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதாலும், மிக சீனியரான சுப்புலட்சுமி விலகிவிட்டதால் அவரை எப்படியும் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அப்பதவியிலேயே அமர வைக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இன்னும் சிலர் மேற்கண்ட மூவரில் யாருக்குமே துணை பொதுச் செயலாளர் பதவி கிடையாது. பூங்கோதை ஆலடி அருணாவுக்கே கொடுக்கப்படும் என்ற தகவலும் வருகிறது. எனவே அடுத்த துணை பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலின் யாருக்கு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 479

0

0