குரங்கு கையில் சிக்கிய பூமாலை… விடியா திமுக அரசால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சிக்கல்… பொது பாடத்திட்டத்திற்கு இபிஎஸ் கடும் எதிர்ப்பு..!

Author: Babu Lakshmanan
29 July 2023, 1:38 pm
EPS Vs Stalin - Updatenews360
Quick Share

தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ‘பொன்மன செம்மல்’ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வி துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது.

குறிப்பாக, 2011-ல் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை, அதனை தொடர்ந்து 10 ஆண்டு கால கழக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது. கடந்த இரண்டு ஆண்டு காலம், விடியா தி.மு.க. ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசில், உயர்கல்வி துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

துறையின் அமைச்சர் திரு. பொன்முடி, தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, தமிழ் நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்கல்வி துறையின் வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் இருப்பதால், தமிழகத்தில் உயர்கல்வி துறை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாட திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடியா அரசு உத்தரவிட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாட திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொது பாட திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

தமிழக உயர்கல்வி துறை, கபட வேட திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி, குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் மாறி, சின்னாபின்னமாகி உள்ளது வேதனைக்குரியது. எனவே, கல்வி துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து, எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 206

0

0