பத்ரி சேஷாத்ரி கைது.. கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கும் ஊழல் திமுக அரசு : அண்ணாமலை கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 12:09 pm
Quick Share

கிழக்கு மண்டல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் கைது நடவடிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த பதிப்பாளரும், அரசியல் விமர்சகருமாக இருப்பவர் பத்ரி சேஷாத்ரி. அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது :- மணிப்பூர் விவகாரத்தில் உங்களால் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்வோம் என நம் சந்திரசூட் (சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி) கூறுகிறார். அவர் கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூர் செல்லுங்கள் சார். சென்று அங்கு ஏதாவது அமைதியை கொண்டுவர முடியுமா என்று நீங்கள் பாருங்கள். சும்மா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் ஏதாவது பேசவேண்டியது. நீதிமன்றமாக நீ அரசாங்கத்திற்குள் நுழையமுடியுமா? அவர்கள் (மத்திய அரசு, மணிப்பூர் அரசு) செய்து கொண்டிருப்பதில் என்ன குறை கண்டீர்கள்?, என ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்து தெரிவித்ததாக பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், பெரம்பலூர் போலீசார் பத்ரி சேஷாத்ரியை சென்னையில் இன்று காலை கைது செய்தனர்.

அவரது கைது சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 228

0

0