இப்படியொரு அரிஸ்டாட்டில் முதலமைச்சரை பார்த்ததே இல்ல… கான்ட்ராக்ட் விவகாரத்தில் 30 ஆயிரம் கோடி ; வைகை செல்வன் குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 12:10 pm
Quick Share

தமிழகத்தில் தான் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைச்சர் இலக்கா இல்லாத ஒரு அமைச்சராக தொடர்வது தற்போதைய திமுக ஆட்சியில் தான் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.

அப்போது, அவர் கூறியதாவது ;- தமிழகத்தில் தான் குற்றம்சாட்டப்பட்ட ஒரு அமைச்சர் இலாகா இல்லாத ஒரு அமைச்சராக தொடர்வது தற்போதைய திமுக ஆட்சியில் தான். உயர் நீதிமன்றமே இது போன்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அமைச்சராக நீடிக்க கூடாது என்று சொன்ன பின்பும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் இலக்கா இல்லாத அமைச்சராக தற்போது வரை பதவி வகித்து வருகிறார்.

முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளனர் என்று சொன்னது அதிமுக அல்ல, தற்போது பதவி வகித்து வரும் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள். மாதம் ஆயிரம் ரூபாய் என்றாலும் 24 மாதங்களில் 24 ஆயிரம் ரூபாய் வரவேண்டும். ஆனால், 12 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறிய அறிவாளி மற்றும் அரிஸ்டாட்டில் முதலமைச்சரை தமிழகம் பார்த்ததில்லை. தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான், அவ்வப்போது நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தற்போதைய முதலமைச்சர் உரையாற்றி வருகிறார்.

குறிப்பாக, கடந்த கருணாநிதி ஆட்சியில் தான் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், மத்தியில் காங்கிரஸ் அரசு உடன் கூட்டணி அங்கம் வகித்து அமைச்சர் அவையில் பொறுப்புகளை வாங்கிய திமுக அரசு உண்ணாவிரதம் என்ற பெயரில் கருணாநிதி அவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

அன்றைக்கு காங்கிரஸ் அரசோடு கைகோர்த்துக்கொண்டு ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களை திமுக அரசு கொன்று குவித்தது. தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரியில் தமிழகத்துக்கு உண்டான பங்கினை தர மறுக்கிறார்கள். அதனை தட்டி கேட்க இயலாத ஒரு அரசாக திமுக அரசு உள்ளது.

ஓசி பிரியாணி வாங்கி சாப்பிட்டு மன்னிப்பு கேட்ட திமுகவினரை போல் இல்லாமல், மதுரை அதிமுக மாநாட்டில் அனைவருக்கும் உணவு அளித்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. திமுகவினர் தற்போது கான்ட்ராக்ட் விவகாரத்தில் முப்பதாயிரம் கோடி என்று வகையில் கணக்கு பார்த்து சம்பாதிக்கின்றனர், என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் குற்றம் சாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் அதிமுகவினர்கள் பங்கு பெற்றனர்.

Views: - 255

0

0