ரவுடிகளுடன் நுழைந்து அராஜகம்.. முக்கிய ஆவணங்கள் திருட்டு.. ஓபிஎஸ் மீது போலீஸில் அதிமுக புகார்..!!

Author: Babu Lakshmanan
12 July 2022, 9:32 am
Quick Share

சென்னை : அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நேற்று தேர்வு செய்யப்பட்டா. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த அதிமுக ஆவணங்களை தனது வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியதுடன், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டன.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வன்முறை, மோதல்களால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்து, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள மனுவில், 300 ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு தரும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தை சூறையாடிய,
ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 444

0

1