அமைச்சர் துரைமுருகனுடன் கைக்கோர்த்த அதிமுக… தமிழகத்தின் உரிமைக்காக இன்று மத்திய அமைச்சரை சந்திக்கும் குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 11:42 am
Duraimurugan - Updatenews360
Quick Share

அமைச்சர் துரைமுருகனுடன் கைக்கோர்த்த அதிமுக… தமிழகத்தின் உரிமைக்காக இன்று மத்திய அமைச்சரை சந்திக்கும் குழு!!

கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு நமக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

இதனையடுத்து, கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று வாரியமானது அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அனைத்து கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று மையத்தின் உத்தரவுபடி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளனர்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அதிமுக சார்பில் தம்பிதுரை, மதிமுக சார்பில் வைகோ , விசிக சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கேவாசன், காங்கிரஸ் தலைமையில் ஜோதி மணி, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், முஸ்லீம் லீக் பிரதிநிதிகள், கொங்கு நாடு கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி வலியுறுத்தவுள்ளனர்.

Views: - 229

0

0