‘ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அமித்ஷா கூறவில்லை’: டிடிவி தினகரன் கருத்தால் சலசலப்பு..!!

Author: Rajesh
9 April 2022, 3:42 pm
Quick Share

தஞ்சை: ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அமிர்ஷா கூறவில்லை என்று தஞ்சையில் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.

இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களது மொழியில் பேசுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தான் இந்தி மொழி என மத்திய அமைச்சர் கூறியதாக நான் படித்தேன்.

மற்றப்படி ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிர்ப்பதமாக செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

பழைய ஆட்சியாளர்களை குறை கூறிக் கொண்டு இருப்பதனால் எந்த பயனும் இல்லை. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் மக்கள் நலன் கருதி அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தினார்.


பெட்ரோல் ,டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்த விலையேற்றம் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.


சசிகலா பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து வருகிற 11ம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம்.

Views: - 644

0

0