தயாரா இருங்க.. விரைவில் இது நடக்கப் போகுது : நெசவாளர்கள் மத்தியில் அடித்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 9:35 am

ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி, நெசவாளர் பிரிவின் சார்பில் தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய அளவில் தேசிய கைத்தறி தினத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயம், தொழில்துறை எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருக்கிறதோ அதேபோல் கைத்தறித்துறையும் உள்ளது.

தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். இந்தியாவில் 58 குழுமம் உள்ளது. ஆயிரம் நெசவாளர்கள் சேர்ந்து ஒரு குழுமத்தை உருவாக்கி 25 லட்சம் வரை மானியம் பெறலாம்.

தற்போது பருத்தி விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டியில் 5 சதவீதமாக இருந்தது. 12 சதவீதமாக உயரப் போகிறது என வந்த போது மறுபடியும் 5 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நெசவாளர்களே இருக்கக்கூடாது என திமுக செயல்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு இதுவரை நெசவாளர்களுக்கு டெண்டர் கொடுக்கவில்லை.

இந்த முறை வெளிமாநிலத்தவர்களுக்கு டெண்டர் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் மாநில அரசின் 486 கோடி ரூபாய் நெசவாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வராது. 10% 20% கமிஷன் கிடைக்கும் என்பதற்காக திமுக செயல்படுகிறது.

இதற்காக பாஜக நெசவாளர் அணி சார்பில் போராட்டம் நடத்தி டெண்டர் கொடுக்க வைக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு 1000 யூனிட் வரை இலவசம் என அறிவித்துவிட்டு இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் ஒரு யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தி உள்ளனர்.

நெசவாளர் அணி மாநில தலைவர் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து போராட்டம் நடத்தி பாஜக சார்பில் 486 கோடி ரூபாய் நெசவாளர்களின் வங்கிக் கணக்கில் கொண்டுவர போராட்டம் நடத்த வேண்டும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பட்டியலின மக்கள் விசைத்தறி வாங்க ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை. இந்த திட்டத்தில் 25 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

திமுக அரசு இந்த 15 மாதத்தில் ஆமை வேகத்தில் அரசு நடந்து வருகிறது. இந்தியாவில் ஆடை ஏற்றுமதியில் 50 சதவீதம் கொங்கு பகுதியில் உள்ளது. நெசவாளர்களுக்கு கிடைக்கக்கூடிய டெண்டர்களை பெறுவதற்காக போராட்டம் நடத்த தயார் செய்ய வேண்டும் என பேசினார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?