பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டிக்கு குண்டாஸ்..? ஒரே நாளில் பாய்ந்த அடுத்தடுத்த வழக்குகள்.. பாஜக அப்செட்..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 6:56 pm
Quick Share

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே அனுமதியின்றி சுமார் 50 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை கற்களை எறிந்து உடைத்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. மேலும், வாகனத்தின் கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், கானாத்தூர் தனிப்படை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை மேலும் 3 வழக்குகளில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பேனரை சேதப்படுத்திய வழக்கிலும், நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கிலும், தென்காசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளிலும் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 190

0

0