அவதூறு வழக்கு போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது… போட்டோவோடு திமுகவுக்கு செக் வைத்த அண்ணாமலை…!!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 5:10 pm
annamalai---stalin-updatenews360
Quick Share

மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தன் மீது அவதூறு வழக்கு போட்ட திமுகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம், என தெரிவித்துள்ளார்.

தனது X தளத்தில் ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் இருப்பதைப் போன்ற புகைப்படத்தையும் அண்ணாமலை பகிர்ந்து, திமுகவினரை மேலும் வெறுப்பேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 110

0

0