சவால் விட்டீங்களே… எதையாவது உருப்படியாக செய்தீர்களா..? வெட்டி வாய்ச்சவடால்தான்… திமுகவை விளாசிய அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
5 July 2022, 12:58 pm
Quick Share

மலை சாதியைச் சேர்ந்த ஒரு பட்டியல் இனப் பெண்ணை குடியரசு தலைவராக பாஜக முன்னிறுத்தியதை, சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் திமுக துள்ளிக்குதித்து வரவேற்று இருக்க வேண்டாமா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

இதுதொடர்பாக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே, சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்” என்று புரட்சித்ததலைவர் அவர்கள் திமுகவிற்கு எதிராக பாடிய பாடல், ஊழலில் ஊறிப்போன திமுகவின் உண்மைத்தன்மையை தோலுரித்து குறித்துக் காட்டுகிறது. இந்த பாடல் தற்போதைய ஆட்சிக்கு மிகத்துல்லியமாக இந்தப்பாடல் பொருந்துகிறது.

தமிழகத்தின் ஓராண்டு காலமாக புதிய வளர்ச்சி திட்டங்கள் இல்லாமல், வணிகம் தொழில் மேம்பாடு இல்லாமல், தொலை நோக்கு பார்வை இல்லாமல், வெறும் சுய விளம்பரங்களைத் தேடிக்கொண்டு, திறமை இன்றி இருக்கிறது. மேலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எல்லாம், தமிழக லேபிள் ஒட்டி, காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கழக அரசுக்கு மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைக்க பாஜக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

திமுகவின் வாக்குறுதிகளை நம்பி, வாக்களித்துவிட்டு பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும், தமிழக மக்களின் பாதிப்புக்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் பாஜகவின் மாவட்டங்கள் அறுபதிலும் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களும் ஒன்றாக இணைந்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் நடத்த இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மிக மோசமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித்துறையில் தொலைநோக்கு பார்வை இன்றி தொடர்ந்து நடைபெற்று வரும் குழப்பமான நடவடிக்கைகள், மொழியை மதத்தை இனத்தை சாதியை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை திட்டமிட்டு எதிர்க்கும் திமுகவின் தொடர் நடவடிக்கைகள் தொழில் வணிகத் துறையில் தொடரும் எதிர்வினைகள், விவசாயிகளை பற்றிக் கவலைப்படாமல் அவர்களை கைவிட்ட நிலையில் வைத்திருப்பது ஆளும் திமுகவின் நடவடிக்கைகள், அனைவருக்கும் பெரும் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்து கொடுக்கவில்லை, கேஸ் சிலிண்டருக்கு தருவதாகச் சொன்ன மானியம் கொடுக்கவில்லை, பெட்ரோல்-டீசல் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நீட் தேர்வினை நீக்கி விடுவோம் என்று சவால் விட்டார்கள் எதையாவது உருப்படியாக செய்தார்களா? அவர்களால் செய்ய முடியாது. பாமர மக்களை ஏமாற்ற பசப்பு வார்த்தைகளை பேச முடியும். செய்யமுடியாத தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் வெட்டி வாய்ச்சவடால் விட்டுவிட்டு, வெறும் அறிக்கை அரசியலை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையான மக்கள் துன்பத்தைப் பற்றி ஒருவருக்கும் அக்கறையில்லை.

பட்டியல் இனத்தில் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம், பீகார் மாநிலத்தின் மலைச் சாதியைச் சேர்ந்த ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, நாட்டின் குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்திய போது, சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் திமுக துள்ளிக்குதித்து வரவேற்று இருக்க வேண்டாமா? அதற்கு பதிலாக உயர்சாதி இனத்தவரான யஸ்வந்த் சினிமாவை ஆதரிப்பது என்பது இந்த புள்ளிகள் திமுகவிற்கு உண்மையான கொள்கைகள் பிடிப்பு என எதுவுமே கிடையாது. எந்த ஒரு செயலுக்கும் லாப நோக்கம் இல்லாமல், திமுகவால் செயப்படவே முடியாது.

சட்டமன்றத்தில் மக்கம் பிரச்சினைகள் பேசப்படுவதற்கு பதிலாக முதல்வரையும் அவர் குடும்பத்தினரையும் துதிபாடும் நடவடிக்கைகளே அதிகம் எடுக்கப்படுகிறது. இதில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இடையே பெரும் போட்டியே நிலவுகிறது. தங்களின் பதவி சுகத்தை முன்னிறுத்தி மக்கள் படும் துன்பத்தையும் மறந்து விட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கண்டித்து ஒருநாள் பட்டினிப் போட்டத்தை பரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கிறது.

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் நம் தாமரைச் சொந்தங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்து மக்களை ஒன்று திரட்டி நடத்தும் இந்த போராட்டம் முழு வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் தழுவிய, ஆட்சிக்கு எதிரான போராட்டம் மக்கம் சக்தியை ஒன்று திரட்டி, மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற்று ஆதரவளிக்க வேண்டுல் என்று பணிவுடன் வேண்டுகிறேன், என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக அண்ணாமலை காட்டமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Views: - 565

0

0