தமிழகத்தில் ஆட்சியில் ஊழல் பெருச்சாலிகள்… வெறும் ஸ்டிக்கர் ஒட்டியே ஆட்சி நடத்தும் திமுக ; அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 10:35 am
Quick Share

பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும் திமுக அரசு தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மண், என் மக்கள் எனும் தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார நடைபயணம் மன்னார்குடி, ருக்குமணி பாளையம் சாலையில் தொடங்கி பந்தலடி, மேலராஜ வீதி வழியாக தேரடி வந்தடைந்தது.

இந்த பேரணியில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், தேரடியில் நடைபெற்ற பிரச்சார வாகனத்தில் நின்று பேசிய அண்ணாமலை கூறியதாவது :- என் மண் என் மக்கள் பிரச்சாரம் பாதயாத்திரை 115 அது தொகுதியாக மன்னார்குடிக்கு வருகை தந்துள்ளேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அநியாயம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக்கில் அரசுக்கு வருவது ரூ. 44 ஆயிரம் கோடி வருமானம். தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் செய்வது எல்லாமே அவர்கள் குடும்பத்திற்கு, அவர்களுடைய தலைவர்களுக்கு மட்டுமே செய்து வருகிறார். குறிப்பாக, அவருடைய மகளும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். அதற்கான ஆட்சி திமுக ஆட்சி. தமிழகத்தில் தாமரை தான் ஊழல் பெரிச்சாலிகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றி வருகிறது.

ஒவ்வொரு பிரச்சனையும் பாஜக அரசு கையில் எடுத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்து ஒவ்வொரு ஊழல் பிரச்சனைகளையும், மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து உங்களுடைய குரலுக்கு திமுக செவிசாய்க்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகளை பாரதிய ஜனதா அரசு தாமரைக் கட்சி காப்பாற்றிக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு தாமரை தேவைப்படுகிறது குளங்களுக்கு தாமரை எப்படி தேவைப்படுகின்றதோ, அதேபோல தமிழ்நாட்டிற்கும் தாமரை தேவைப்படுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தேவைப்படுகிறார்.

குறிப்பாக, டி ஆர் பாலு வடசேரியில் கெமிக்கல் நிறுவனத்திற்கு சாராய ஆலை அமைக்க வேண்டும் என்பதுதான் டி ஆர் பாலுவின் ஆசை. அவருடைய மகன் மன்னார்குடியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். வடசேரியில் சாரய ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை அடித்து துரத்தியவர் டி.ஆர்.பாலு. சாராய ஆலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பது வழக்கம். ஆனால் சாராய ஆலை அமைப்பதற்கு சாராய ஆலை உள்ளேயே கருத்து கேட்பு கூட்டம் நடந்திருப்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது.

சாராய ஆலைக்குள் விவசாயிகள் போவார்களா..? சாராய ஆலைக்குள் விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய முடியுமா? யாருமே போக முடியவில்லை. இதனால், பல தொழிலாளிகள் ஆதரவு கொடுத்திருப்பதாக பரவலாக வந்த செய்தியின் அடிப்படையில் சாராயக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 9ஆம் தேதி கருப்பு நாளாக வடசேரி பகுதியில் அனுசரிக்கப்படுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் டி .ஆர்.பாலு. அதே போல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டி .ஆர் .பி. ராஜா, இருவரும் ஒன்றிணைந்து வளர வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய சாராய நிறுவனம் நன்றாக வளர்வதற்காகவும், தற்பொழுது டாஸ்மாக் கடை எங்கு வருகிறது, திமுக காரர்கள் பல இடங்களில் சொல்லி வருவது என்னவென்றால் டாஸ்மாக் இல்லையென்றால் தமிழக அரசே நடத்த முடியாது என சொல்லி வருகிறார்கள்.

புதிய வருமானம் கிடையாது என்றும் சொல்லி வருகிறார்கள். தமிழக அரசு விற்கக்கூடிய சாராய கடை மூலமாக அமைச்சர்களுக்கு வரக்கூடிய லாபம் 50 ஆயிரம் கோடி. பாஜக அரசு சமீபத்தில் ஆளுநருக்குஒரு வெள்ளையறிக்கை அளித்து இருந்தோம். அதில் தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடையை மூட வேண்டும், கல்லு கடைகளை திறக்க வேண்டும், அதன் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு எப்படி வருமானம் வரும் என்பதை வெள்ளை அறிக்கையாக அளித்திருந்தோம்.

திமுக அரசு தலைவர்கள் வரைக்கும் டாஸ்மாக் கடைகளை வைத்திருப்பவர்கள், அவர்கள் நடத்தக்கூடிய சாராய ஆலைகள். குறிப்பாக டி .ஆர்.பாலு போன்ற மனிதர்கள் நடத்தக்கூடிய சாரை ஆலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் கடையை திறந்து உள்ளார்கள். அதில் சாதாரணமாக வேலை செய்யக்கூடியவர்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்கள் 500 லிருந்து 600 ரூபாய் சம்பாதிக்க கூடியவர்கள். அதில் 400 ரூபாயை டாஸ்மாக் கடையில் கொடுத்துவிட்டு பணம் இருப்பவர்கள் இன்னும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காக இந்த டாஸ்மாக் அடிப்படை மாடல் அரசாக இருக்கிறது.

தற்போது திராவிட மாடல் அரசு டாஸ்மாக் அரசாக இருக்கிறது. தற்போது தீபாவளி திருவிழாவிற்கு 467 கோடி ரூபாய் இரண்டு நாட்கள் மட்டுமே வருமானமாக டாஸ்மாக் கடையில் இருந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பட்டி, தொட்டிகள் எல்லாம் டாஸ்மாக் கடைகள் அதிகமாக திறந்து இருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

மன்னார்குடியில் 2021ல் ஜவுளி பூங்கா அமைக்கப்போவதாக டி ஆர்.பி.ராஜா சொன்னார். அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். ஆனால் இதுவரையிலும் அந்த ஜவுளி பூங்காவிற்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. மன்னார்குடி எம்எல்ஏ தற்போது தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார் . தமிழகத்தில் ஊழல் பெரிச்சாலிகள் யாரெல்லாம் இருக்கிறார்கள், டி .ஆர்.பாலு மகன் என்ற தகுதியில் டிஆர்பி ராஜா தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார். டிஆர்பி ராஜாவின் குடும்பத்திற்கு 21 நிறுவனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது . அதற்காக தான் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை அமைச்சர் பதவியை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்று ஜவுளி பூங்கா எப்பொழுது அமைக்க போறீங்க. அதேபோல உங்க முதல்வர் துபாய் போனார் 6000 கோடி தமிழ்நாட்டிற்கு வருமானம் வரும் என்று சொன்னார். துபாய் போய் டீ குடித்த காசு கூட இதுவரையிலும் தமிழகத்திற்கு வரவில்லை. திமுக ஆட்சி என்பது ஒரு குடும்பம் மட்டுமே வளர்வதற்கான ஆட்சி. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல,

தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பாராளுமன்றத்தில் வருகை 48 சதவீதம் மட்டுமே உள்ளது. சராசரியாக 539 பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை பதிவு 70 சதவீதம் இருக்கிறது. ஆனால் உங்க பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் வருகை சதவீதம் 48 சதவீதம் மட்டுமே உள்ளது. இதுவரையிலும் பாராளுமன்றத்தில் எஸ்எஸ் பழனிமாணிக்கம் எத்தனை கேள்விகள் கேட்டு இருப்பார்.5 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனி மாணிக்கத்தை காணவில்லை என என்னிடம் ஒரு பெண் மனு அளித்துள்ளார்கள்.

இதுவரையிலும் தஞ்சை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜீரோ கேள்வி மட்டுமே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளார் . 48 சதவீதம் வருகை, கேள்வி பூஜ்ஜியம், ஆனால் தஞ்சாவூரில் வந்து பாரதிய ஜனதா கட்சிக்காரரிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தஞ்சாவூருக்கு விமான நிலையம் வேணும் என தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பாஜக கோரிக்கை வைத்து பத்து நாட்களுக்குள் தஞ்சைக்கும், சென்னைக்கும் விமான இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழனிமாணிக்கம் சொல்கிறார், திமுக தான் விமான நிலையத்தை கொண்டு வந்தது என சொல்லி வருகிறார்.

ஆனால் நீங்கள் கேள்வி கேட்டதே பாராளுமன்றத்தில் பூஜ்ஜியம், பாராளுமன்றத்திற்கு போனதே 48 சதவீதம். இதில் நீங்க கேட்ட கேள்வி எங்க உள்ளது. பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும் திமுக அரசு தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது. திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிய அரசு டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைவரையும் எஸ்எஸ் பழனிமாணிக்கம் ஏமாற்றி விட்டார், எந்த பணியையும் செய்ய முடியாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று சொன்னால், அது எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தான். அனைவரும் பாரதப் பிரதமர் மோடியின் வழியில் நின்று தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக உறுப்பினர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 171

0

0