ED சம்மனால் நடுநடுங்கும் ஊழல் திமுக அரசு… வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயம் ; அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 4:15 pm
Annamalai Stalin - Updatenews360
Quick Share

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், போலி பில்களை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் வராது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதனிடையே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது.

மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்?

தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா?, என தெரிவித்துள்ளார்.

Views: - 184

0

0