ஒரு அமைச்சர் சிறையில்… வெயிட்டிங் லிஸ்டில் 5 அமைச்சர்கள்… திமுகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 11:31 am
Quick Share

திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் நடந்த 100வது நாள் நடைப்பயண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் 100வது நாளாக 225 தொகுதியாக “என் மண் என் மக்கள்” நடைபயணத்தில் பங்கேற்று கட்சியின் தொண்டர்களுடன் சுமார் 2 கி.மீ நடந்தார். பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடைபயணத்தை முடித்துவிட்டு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை கூறியதாவது :- மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார். எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் ஊழல் ஆட்சி குடும்ப ஆட்சியாக இருந்து வருகிறது. உதாரணம் செந்தில் பாலாஜி 250 நாட்கள் சிறையில் இருந்து வருகிறார். அவரது தம்பி அசோக்குமார் தலைமறைவாய் இருந்து வருகிறார். காவல்துறை ஊழலுக்கு துணை போகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

திமுகவை சேர்ந்த 11 மந்திரிகள் மீது ஊழல் வழக்குகள் இருந்து வருகிறது. தமிழக அரசுக்கு 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அந்த கடனை அடைக்க 86 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். திமுக கமிசன் போடுவதற்காக பட்ஜெட் போடுகிறது. பாஜக தொலைநோக்குடன் பட்ஜெட் போடுகிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யபடும். மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். அவற்றுக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும். பாஜக ஆட்சியில் காவல்துறையினரின் சம்பளம் இரட்டிப்பு செய்யப்படும். 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற நிலை உருவாக்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்து 14 மாதமாக ரிசல்ட் வரவில்லை. பாஜகவின் திட்டங்கள் மக்களுக்கு வரக்கூடாது என திமுக செயல்படுகிறது, எனக் கூறினார்.

Views: - 255

0

0