திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் திருமாவளவன்.. ஒரேவொரு ரெய்டு போதும்… தமிழகத்தின் பாதி கடனை அடைத்து விடலாம் ; அண்ணாமலை

Author: Babu Lakshmanan
6 January 2024, 4:11 pm
Quick Share

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு நடத்தினால் தமிழகத்தின் பாதி கடனை அடைத்து விடலாம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள RR மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- ஜன.,9 ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. திமுக அரசு போக்குவரத்து கழகத்தை நிர்மூலமாக்கிவிட்டனர். மாநில அரசு 8ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல சாத்தியக்கூறு இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய நிலையில், திமுக அரசின் தவறான வாக்குறுதியால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் என்பது போட்டிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்கள் திமுக – காங்கிரஸ் தான். இந்நிலையில் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் காலத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் கலைஞர் என பெயர் தான் வைக்க வேண்டும் என்றாலும் கூறுவார்கள்.

பத்திரப்பதிவுத்துறையில் மூர்த்தி பீஸ் என தனியாகவே வாங்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவுத்துறை மிக மோசமாக பண வசூல் துறையாக மாறியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடி கோடியாக சிக்கும் தமிழ்நாடு பாதி கடனை அடைத்துவிடலாம்.

அமலாக்கத்துறையின் ஸ்பெல்லிங் கூட எங்க மாவட்ட செயலாளருககு தெரியாது. விவசாயிகள் மீதான அமலாக்கத்துறை நோட்டிஸில் சாதி பெயர் குறிப்பிட்டுள்ளது என்பது காவல்துறை FIRல் சாதி பெயர் இடம்பெற்றதால் தான் இடம்பெற்றுள்ளது என கூறுகிறார்கள். வனத்துறை சார்பில் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் நோட்டிஸ் கொடுத்துள்ளார்கள். அரசியல்வாதிகள் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேசும்போது எங்கு தவறு என குறிப்பிட வேண்டும்.

2024க்கான நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி தமிழகத்தில் யாரும் இல்லை. அப்படி இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைப்போம். இண்டியா கூட்டணி சுயநலக்கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை ஆதரிக்கும் கூட்டணி, மோடியை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்வோம்.

பொன்முடி வழக்கில் நீதிபதி மீது கம்யூனிஸ்ட், விசிக தலைவர் ஆகியோர் சந்தேகம் எழுப்புகின்றனர். அவர்கள் திமுகவிலயே இணைந்து விடலாம். திமுக கூட்டணியை பாஜகவுடன் ஒப்பிட வேண்டாம். இதே கம்யூனிஸ்ட், திருமாவளவன் திமுக குறித்து பேசியுள்ளனர். அவர்கள் இப்போது திமுகவுக்கு ஜால்ரா அடிக்கின்றனர்

தற்போது தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. நான் எந்த கூட்டணி தலைவரையும் சந்திக்கவில்லை. சந்தித்ததும் இல்லை. அவர்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால் எங்களை பார்ப்பார்கள். என்னுடைய வேலை பாஜகவை பலப்படுத்துவது தான் அந்த வேலையை வெற்றிகரமாக செய்கிறேன். மற்ற கட்சியை பலப்படுத்துவது எனது வேலை இல்லை.

இந்தியாவை போல தமிழகத்திலும் மண்டல வாரியாக வரிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பேசுவாரா?, வளர்ச்சி அடையாத மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு மாவட்ட வாரியான வரிசெலுத்தியது, திட்டங்கள் செயல்படுத்தியது குறித்து அறிக்கை வெளியீடுவார்களா? பீகாரை விட தமிழகத்தில் சில மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது.

மாவட்ட வாரியாக வரிவசூல் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தாருங்கள். குளோபல் இன்வெஸ்டர் மீட் நடைபெறவுள்ளது. ஏற்கனவே துபாய்க்கு, ஜப்பான், சிங்கப்பூர் போயிட்டுவந்த முதலீடுகள் எத்தனை. தேர்தலுக்காக இது போன்று நாடகமாடுகின்றனர். ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களை மிரட்டி ஒப்பந்தம் போடப்படுகிறது.

தமிழக அரசு மக்களை ஏமாற்றாமல் புதிய நிறுவனங்களின் முதலீடுகள் என்ன என்பதை கூறுங்கள். மதுரை எய்ம்ஸ்க்கு நில ஒப்படைப்பு தாமதமானதால் எய்ம்ஸ் வர தாமதம். தற்போது மதுரை எய்ம்ஸ் பணிக்கான டெண்டர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என காட்டட்டும், நானும் கையில் செங்கலை எடுத்து சுத்தப்போகிறேன்.

2024 -மட்டுமல்ல 2038 வரை மோடி அவர்கள் தான் பிரதமர், திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் எத்தனை பேர் தமிழர்கள்., இங்கு ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் தமிழர் என்கிறார்கள். குஜராத்தில் பிறந்து தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் மோடி கண்டிப்பாக தமிழன் தான். அவரை ஏன் தமிழன் என்று சொல்லக்கூடாது. டெல்டாவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தான் உண்மையான டெல்டாகாரர், தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியை பெறுவார், என்றார்.

Views: - 211

0

0