தலையை சீவி விடுவாயா? என சவால் விட்ட அமைச்சர்… அண்ணாமலை கொடுத்த ரிப்ளையால் அதிர்ச்சியில் திமுக…!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 12:14 pm
Quick Share

கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நிகழ்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பாலின் விற்பனையை நிறுத்தி விட்டு, கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பாலின் விலையை அதிகரித்து விற்பதாக, சில ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் சளிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.

இப்படியிருக்கையில், அமைச்சரின் ஒரு குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலளித்து ஒரு டுவிட் போட்டிருந்தார். அதாவது, “திரு மனோதங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.

ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு, எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மனோதங்கராஜ் , ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!, எனக் கூறியிருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே ரியாக்ஷன் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ், நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு,” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, திமுக பைல்ஸ் என்று பொய்யான முறைகேடு பட்டியலை வெளியிட்டதாக அண்ணாமலைக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் சிலர் பல கோடிகளை கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது, திமுக அமைச்சருக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 228

0

0