மணல் குவாரி முறைகேட்டில் சிக்கிய ஆதாரம்..? சிக்கலில் தொழிலதிபர் ரத்தினம்.. அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 11:32 am
Quick Share

திண்டுக்கல் ; திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் தொழிலதிபர் வீட்டில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 12.09.23 காலை 9 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ரத்தினம் வீட்டில் 31 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ரத்தினம் வீட்டில் அவருடைய மூத்த மகன் துரைராஜ் மற்றும் அவருடைய மனைவி இளைய மகன் வெங்கடேஷ் தாயார் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே, வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் நகை எடை இயந்திரம் 2 உடன் வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்த நகைகளை எடை போட்டு மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து, 31 மணி நேரம் அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் 25ம் காலை திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Views: - 355

0

0