சாதி அரசியலில் திளைத்துப் போன… ஓசி சோறு பட்டம் பெற்ற வீரமணி தான் வெட்கப்படனும் : பாஜக அட்டாக்..!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 2:00 pm
Quick Share

வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருந்தது. நாங்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து போராடி அகற்றினோம். அதற்கு சற்றுத் தள்ளி போய் பார்த்தால், டாஸ்மாக் மதுபானக் கடை இருக்கும். ஆனால், அங்கு ஒற்றைக் குவளை தான். கொஞ்சம் சாராயம் (மது) உள்ளே போனதும் அருகில் இருப்பவரை பார்த்து பிரதர் என்று தான் சொல்கிறான். அதுவும் ஆங்கிலத்தில். அப்போது சாதி எங்கே போனது. நாங்கள் 50 ஆண்டுகளாக சாதிக்காததை அரை டம்ளர் சாராயம் சாதிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று கி.வீரமணி பேசியிருந்தார்.

வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி தான். அரும்பாடுபட்டு சாராய சாம்ராஜ்யத்தையும், சாராய ரௌடிகளையும் அடக்கி, ஒடுக்கி மது விலக்கை அமல்படுத்தி, தமிழகத்தை நேர் பாதையில் ராஜாஜி நிறுத்திய நிலையில், 1971 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது சாராய ஆற்றை தமிழகத்தில் ஓடச் செய்து புளகாங்கிதம் அடைந்த கும்பலை ஆதரித்து கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டியது வீரமணி தான்.

சாராயம் போயிற்றே, வருமானம் எங்கிருந்து வரும்? என்ற கேள்விக்கு பணம் படைத்தவர்களிடம் வரி விதித்து, ஏழை எளியவர்களை காப்பதே அரசின் கடமை என்று சொல்லி மது விலக்கை அமல்படுத்தினார் ராஜாஜி. ஆனால் அந்த பணம் படைத்தவர்களுக்கு விதித்த வரியில் சமரசம் செய்து கொண்டு, ஊழல்கள் பல செய்து, டாஸ்மாக் வருமானத்தை அதிகரித்து இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உருவாக காரணமாக விளங்கி கொண்டிருக்கிறவர்களுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு வீரமணி போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதிலும் தீண்டாமைக்கு எதிராக 1920 லேயே குரல் கொடுத்தவர் ராஜாஜி.

ராஜாஜி ஆட்சி காலத்தில் தான் ஆதிக்க சக்திகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பட்டியிலன மக்களை கோவில்களுக்குள் செல்ல சட்டமியற்றப்பட்டது என்பதை அறிந்தும், இன்று வரை ராஜாஜியின் சாதியை குறிப்பிட்டு இழித்தும், பழித்தும் பேசிவருவதற்கு வெட்கப்பட வேண்டியது கி.வீரமணி போன்றவர்கள் தான்.

கீழவெண்மணி விவகாரத்தில் வாய் மூடி மௌனியாக இருந்து, பணம் படைத்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும், மாதங்கள் பல ஆகியும் இன்று வரை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூர அரக்கர்களை கைது செய்ய திராணியற்று இருக்கும் கழக அரசை பாராட்டி கொண்டிருக்கும் கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும். சமூக நீதி காத்தோம் என்று 50 வருடங்களாக மார் தட்டி கொண்டு, சாதி அரசியலில் ஊறித்திளைத்து போன தமிழகத்தில்,வால் பிடித்த குடும்ப உறுப்பினராலேயே ஓசி சோறு என்று பட்டம் பெற்ற கி.வீரமணி தான் வெட்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 246

0

0