எங்கெங்க வசூல் பண்றனு நேரலையில் சொல்லட்டுமா? அநாகரீகமாக நடந்த திமுக பிரமுகர்… எச்சரித்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2023, 11:57 am
Radhakrishnan - Updatenews360
Quick Share

சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் ஓவியக் கண்காட்சியை திறந்து வைக்கச் சென்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் திமுக பிரமுகர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். ஆபிசரிடம் அதுவும் சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவரிடமே திமுக பிரமுகர் அத்துமீறி நடந்துகொண்டது ஆட்சிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் அவப்பெயரை தேடித்தந்திருக்கிறது.

சென்னை தினத்தை ஒட்டி சென்னையின் பெருமைகளை ஓவியமாக வரைந்து அதனை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் திமுக பிரமுகர் ஜெய்சங்கர் என்பவர் ஏட்டிக்கு போட்டியாக பேசி வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

அதாவது தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும்,வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லணுமாம். அப்படி சொல்லவில்லை என்றால் நாங்க இப்படித்தான் நடந்துகொள்வோம் என்கிற வகையில் அவரது பேச்சும், நடவடிக்கையும் அமைந்திருந்தது.

அரசு நிகழ்ச்சியை எம்.எல்.ஏ.வுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லாமல் நடத்தினால் அந்த திமுக பிரமுகர் ஜெசங்கர் கேட்ட கேள்வியில் ஒரு லாஜிக் உள்ளது என எடுத்துகொள்ளலாம்.

ஆனால் தனியார் அமைப்பினரும் தகவல் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எங்கிருந்து வருகிறது. எல்லோர் முன்னிலையிலும் தன்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டதோடு, ஸ்டால் போட 2,000 பணம் வாங்குகிறார்களே என திமுக பிரமுகர் ஜெய்சங்கர் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் கேள்வி கேட்க, ஒரு கட்டத்தில் கடுப்பான ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். என்னிடம் நீங்க பணம் வாங்கிக்கொள்ளுங்க, அவர்களிடம் கேட்காதீங்க எனக் கூறிவிட்டு விருட்டென அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனாலும் அந்த திமுக ஆசாமி அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்றதால், கோபத்தின் உச்சிக்கே சென்ற ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நீங்க எங்கெங்க வசூல் பண்ணுறீங்கன்னு டிவி லைவ்வில் சொல்லிவிடுவேன் என எச்சரித்து திமுக கரைவேட்டிகளை அதிர வைத்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்ணா நகர் பூங்காவில் நடைபெற்ற கண்காட்சியில் அரங்கம் ஒன்றிற்கு தலா மூவாயிரம் கேட்டு வற்புறுத்தி, சென்னை மாநகராட்சி ஆணையரிடம்
தகராறில் ஈடுபட்ட தி மு க குண்டர்களின் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால், அரசு அதிகாரியை மிரட்டுவது, மாமூல் கேட்டு பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டியது அரசின் கடமை. மேலும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்து வரு‌ம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மீது கடு‌ம் நடவடி‌க்கை எடுக்கவேண்டியதும் அரசின் முதல் கடமை.

எங்கும் ஊழல், எதிலும் ஊழ‌ல் எ‌ன்ற தாரக மந்திரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது ‘திராவிட மாடல் அரசு’ என விமர்சித்துள்ளார்.

Views: - 276

0

0