மத்திய அரசுதான் பொறுப்பு… இதுல அரசியல் பண்ண விரும்பல… முறையான நடவடிக்கை எடுங்க ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Author: Babu Lakshmanan
14 December 2023, 8:50 am
Quick Share

பாராளுமன்றத்தில் புகை கொண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுக்கோவில் பகுதியில் வெள்ள நிவாரண பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, “பாராளுமன்றத்தில் புகை கொண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். பாராளுமன்றத்திலேயே இப்படி நடந்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதில் அரசியல் பேச விரும்பவில்லை. இந்த இயக்கத்தைச் சார்ந்தவர், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று இல்லாமல் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

கிடப்பில் உள்ள மசோதாக்கள் குறித்து பேச ஆளுநரிடமிருந்து முறையான அழைப்பு வந்தால் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தமிழ்நாட்டில் இருந்து நாம் கட்டிய வரிப் பணத்தை தான் கேட்டுள்ளோம். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் இது குறித்த கருத்துக்களை தமிழ்நாட்டில் வந்து சொல்லட்டும்.

நாளை மறுநாள் காலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் டோக்கன் விநியோகிக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்தில் தொகை வழங்கப்பட்டுவிடும்,” என்றார்.

Views: - 212

0

0