விரைவில் திமுக எனும் அரக்கனை அழித்து மக்கள் தீபாவளி கொண்டாடுவார்கள்… வெட்டி வாய்ச்சவுடாலை விட்டுட்டு வேலையை பாருங்க ; எல்.முருகன்..!!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 8:23 am
Quick Share

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேம்பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 112 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலம் காட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 97 சதவீத பணிகள் நிறைவுற்று, காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தார் சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் அமைக்கும் பணிகளும், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று, டிசம்பர் மாதத்தில் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த மேம்பால கட்டுமான பணிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே.சிங் அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இங்குள்ள மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பால பணிகள் முடிவுபெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு வளர்ச்சிக்கான பணிகளில் கவனம் செலுத்தாமல் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. 2024 தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக எனும் அரக்கனை பொதுமக்கள் முற்றிலுமாக அழித்து மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடுவார்கள்.

சென்னையில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி தான் இருந்தது. சாலைகள் மிக மோசமாக உள்ளது. சென்னையை போலவே கோயம்புத்தூரிலும் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. வாய்ச்சவுடாலை விட்டுவிட்டு தமிழக அரசு செயலில் ஆர்வம் காட்ட வேண்டும், என கூறினார்.

முன்னதாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, கோவை வரும் வழியில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தேநீர் கடையில் பொதுமக்களோடு சேர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது, பொதுமக்கள் அவரோடு செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Views: - 234

0

0