கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம் : அண்ணாமலை, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

Author: Babu Lakshmanan
2 March 2022, 9:06 am

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி, பாஜக முக்கிய நிர்வாகிகள், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் ஆதியோகி சிலைக்கு முன்பாக காலை 6 மணி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இதனிடையே லிங்கபைரவி தேவி மகா யாத்திரை, தியானம், சத்குரு ஜக்கி வாசுதேவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி நிகழ்வைக் காண திரண்டனர்.

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஈஷா யோகா மையத்தின் சார்பில் அன்னதானமும், ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டது.

மகா சிவராத்திரி விழா நடைபெறும் ஈஷா யோக மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?