ஆர்எஸ் பாரதிக்கு நெருக்கடி.. நாகா மக்கள் குறித்த பேச்சை இந்தியில் SUBTITLE போட்டு வீடியோ பரப்பும் பாஜக!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2023, 7:14 pm
RS aN- Updatenews360
Quick Share

ஆர்எஸ் பாரதிக்கு நெருக்கடி.. நாகா மக்கள் குறித்த பேச்சை இந்தியில் SUBTITLE போட்டு வீடியோ பரப்பும் பாஜக!!!

கடந்த இரண்டு நாள் முன்பு, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசுகையில், இன்றைக்கு ஆளுநராக வந்திருக்கிறாரே அவர் என்ன செய்கின்றார். இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்.

எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருக்கிறோம். இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டும் என்றே வம்புக்கு சண்டைக்கு இழுக்கிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கூட கையெழுத்து போட முடியாது என்று சொல்கிறார்.

நான் கூட ஒரு கூட்டத்தில் சொன்னேன். நாகாலாந்திலே இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரே விட்டே விரட்டி அடிச்சாங்க.. நாகாலாந்துக்காரர்கள் நாய் கறி சாப்பிடுவார்கள், நாய் கறி திண்பர்களுக்கே அவ்வளவு சொரணை இருந்து, இந்த கவர்னரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு சோறு திண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும் என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஆளுநர் ரவி, நாகாக்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்களை ‘நாய் கறி தின்பவர்கள்’ என்று பகிரங்கமாக திட்டுவது கேவலமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த ஆர்எஸ் பாரதி, நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி.

நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது என்றார்.

மேலும் நாகாலாந்தில் நாய்கறி தடை சட்டம் ஆளுநர் ரவி கொண்டு வந்தார் என்றும், அதனால் தான் மக்கள் அவரை விரட்டினார்கள் என்றும் ஆர்எஸ் பாரதி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன், தான் ஒப்பிட்டது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த வீடியோவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டு வெளியிட்டு அதன் மீது கேப்சனாக இந்த பதிவினை போட்டுள்ளார். அதில் சமீபத்தில் நடந்த ராஜ்பவன் மீதான தாக்குதல், ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான், ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். அண்ணாமலை இந்தியில் மொழி பெயர்த்த வீடியோ தற்போது வடமாநிலங்களில் பரவி வருகிறது.

வடமாநிலங்களில் தனது வீடியோ பரப்பப்டுவது குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ் பாரதி, திமுகவை பற்றி தவறான பிம்பம் வடமாநிலங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 259

0

0