பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல்.. எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சி : தமிழக அரசு அரசாணைக்கு அதிமுக எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2023, 8:36 pm
aiadmk - Updatenews360
Quick Share

பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல்.. எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயற்சி : தமிழக அரசு அரசாணைக்கு அதிமுக எதிர்ப்பு!

உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பணி என்னவென்றால் அனைத்து ஊடக தளங்களிலும் தமிழக அரசு மற்றும் அமைச்சகங்கள் அதன் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் உண்மை தன்மையற்ற செய்திகளை கண்டறியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவில் 80 பேர் இடம் பெற்று இருப்பார்கள் எனவும் இந்தக் குழுவின் Central Task Force தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அரசு, அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகள் சார்ந்து ‘அனைத்து தளங்களிலும்’ வெளியாகக் கூடிய எந்தத் தகவல்களாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை இந்தக் குழு சரிபார்க்கும்’ எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது.

இந்த உண்மை சரிபார்ப்புக் குழு தாமாக முன்வந்து தகவல்களை சரிபார்க்கும் என்றும் தகவல்கள் சார்ந்து பெறப்படும் புகார்களை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக ‘YOUTURN’ சேனலின் முன்னாள் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐயன் கார்த்திகேயன் நியமனம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில்தான், உண்மை சரிபார்ப்பு குழு அமைத்த தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து அதிமுக பொது நல வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளது. அதிமுக தரப்பில் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்கும் முயற்சி என்று அதிமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. அதிமுக தரப்பில் தொடர்ந்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Views: - 287

0

0