அப்பவே ரஞ்சனா சொன்னாங்க கேட்டீங்களா? இப்ப மாணவருக்கு காலே போயிடுச்சு.. யார் பொறுப்பு? நாராயணன் திருப்பதி சுளீர்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 11:05 am
Ranjana- updatenews360
Quick Share

அப்பவே ரஞ்சனா சொன்னாங்க கேட்டீங்களா? இப்ப மாணவருக்கு காலே போயிடுச்சு.. யார் பொறுப்பு? நாராயணன் திருப்பதி சுளீர்!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு பள்ளி மாணவர் சந்தோஷ், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் சென்றபோது தவறி விழுந்து உள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதால் அவரது கால் செயலிழந்தது.

இதனால் மருத்துவர்கள் அந்த காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்திட்டு உள்ள பாஜகவின் நாராயணன் திருப்பதி, குன்றத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் என்ற மாணவன் நேற்று அரசு பஸ் படியில் தொங்கி பயணித்து இருந்து கீழே விழுந்ததால் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் கால்கள் நசுங்கி, செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றபட்டன என சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் குன்றத்தூர் அருகே கிருகம்பாக்கத்தில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை கண்டித்ததோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்த பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியார் என்ற பெண்மணியை, அவர் யார் கண்டிப்பதற்கு என்று கடுமையாக வசைபாடிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்பார்களா? அல்லது அந்த பெண்மணியின் சமூக அக்கறையை பாராட்ட மனமில்லாமல், அந்த பெண்மணியை அதிகாலையில் வீட்டிற்கு சென்று கைது செய்த காவல்துறை, கால்களை இழந்த மாணவனின் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்குமா? அல்லது ரஞ்சனா நாச்சியார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளில் மாங்காடு காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்திய தமிழக அரசு இந்த மாணவனின் இழப்பிற்கு பொறுப்பேற்குமா?

விதிமீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களிடையே ஒழுக்கத்தை கொண்டு வர முனைந்த அந்த பெண்மணியின் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்த மாநகர போக்குவரத்து கழகம், அதே விதி மீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இரு கால்களை இழந்த மாணவன் மீது தான் தவறு என்று தப்பிக்க பார்க்குமா? யாருக்கும் வெட்கமில்லை! எதற்கும் கவலையில்லை! எங்கும், எல்லாவற்றிலும் பாழும் அரசியல்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 300

0

0