அதிகாரத் திமிறில் ஆடும் திமுக அரசு… கடவுள் முருகன் பாடம் புகட்டுவார் : கொந்தளித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 10:47 am
Kades - Updatenews360
Quick Share

அதிகாரத் திமிறில் ஆடும் திமுக அரசு… கடவுள் முருகன் பாடம் புகட்டுவார் : கொந்தளித்த காடேஸ்வரா சுப்பிரமணியம்!!

இந்து முன்னணியில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திராவிட ஆட்சியில் கோவிலை பொருட்காட்சி போலாக்கி எங்கும் எதற்கும் கட்டணம் என பகல் கொள்ளையில் வெட்கமின்றி ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

ஏழை எளிய மக்கள் தீண்டதாகதவராக நடத்துகிறது இந்து சமய அறநிலையத்துறை. திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களிடம் ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பக்தியை பணமாக்கும் இந்த இழிசெயலை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொந்தளித்துள்ளனர். தமிழக அரசின் கட்டண கொள்ளையை நிறுத்த கோரி நேற்று திருச்செந்தூரில் இந்துமுன்னணி மாநில பொறுப்பாளர்கள் வி.பி. ஜெயகுமார், குற்றாலநாதன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் முருக பக்தர்கள் நூற்றுக்கணக்னோர் திரண்டு அறப்போராட்டம் நடத்தினர்.

அறவழியில் போராடிய பக்தர்கள் மீது காவல்துறை கடுமையான பலபிரயோகத்தை கையாண்டு அச்சுறுத்தி, அடித்து தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மக்களாட்சிக்கு விரோதமான செயல். மக்களாட்சி என்பது மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய ஆட்சியாக இருக்க வேண்டும். ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டண தரிசனத்தை ரத்து செய்யாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது தமிழகத்தில் மக்கள் விரோத பாசிச ஆட்சி நடைபெற்று வருவதை தெளிவுபடுத்துகிறது.

தமிழக அரசின் இந்த அடக்குமுறை ஆணவத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிது. திருச்செந்தூரில் சஷ்டி திருவிழாவிற்காக உயர்த்தப்பட்டுள்ள கட்டண தரிசனத்தை எல்லா வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வசூல் வேட்டை நடத்த உத்திரவிட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும்.

திருச்செந்தூர் கோவிலில் நூறு ரூபாய்க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நேற்று பக்தர்களிடம் நேரிடையாக பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக அதிகாரிகள் அனுமதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது.

சினிமா தியேட்டரில் கூட பிளாக்கில் முறைகேடாக டிக்கெட் விற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இத்தகைய கேவலமான செயல் புனிதமான கோவிலில் நடப்பது வெளிவந்தபோதும் காவல்துறை, அரசு அதிகாரிகள் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இத்தகைய முறைகேடுகளுக்கு இவர்களும் உடந்தையோ என மக்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு திருவிழாவிலும் இதுபோல் நடப்பதை இந்து முன்னணி எதிர்த்து கண்டித்து வந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

சாமியை காட்சி பொருளாக்கி கட்டணம் வசூலிப்பது பொருளாதார தீண்டாமை, பக்தர்களை அவமானபடுத்தும் அராஜகம் என்று பல ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்தி ஆலயத்தில் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்கி வருகிறது இந்து முன்னணி.

மேலும் சென்ற ஆண்டு திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு பக்தி வேண்டுதலோடு பால் குடம் எடுத்து வந்தவர்களை அவமதித்து பிராகாரங்களில் பாலை கொட்டியதும், வேல் குத்தி காவடி எடுத்து வந்த பக்தரை பிடித்து தள்ளி அநாகரிகமாக நடத்தியதும் காணோலியில் கண்ட பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.
இத்தகைய ஆணவ போக்கிற்கு காரணம் பணம் படைத்தவர்களும் அரசியல் அதிகார செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தான் திருக்கோவில் என்ற மமதையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் செயல்படுவது தான். அதிகார திமிரில் இந்து விரோதமாக செயல்படும் நாத்திக திமுக அரசுக்கு முருகப்பெருமான் தகுந்த பாடம் புகட்டுவார் என்பதை மறக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

எனவே தமிழக அரசு திருவிழா காலங்களில் வரும் பக்தர்களை கணிவுடன் நாகரிமாக நடத்திட தமிழக முதல்வர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் இந்து சமய அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எந்த வகையிலும் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக்கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முருக பக்தர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை அற வழியில் இந்து முன்னணி நடத்தும் என எச்சரிக்கிறோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Views: - 241

0

0