பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது… வெளியான புது கருத்துக்கணிப்பு ; பிரேமலதா சொன்ன தகவல்…!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 10:07 am
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மத்திய அரசும், மாநில அரசும் தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்காக முயல்வார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுக்கோட்டை சின்ன பூங்காவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க: பிஞ்சு போன செருப்பா..? வேணாம், எங்களுக்கும் பேச தெரியும்..? அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை..!!!

பிரச்சாரத்தின் போது பேசிய பிரமலதா விஜயகாந்த், இந்த கூட்டணி வெற்றி கூட்டணி, இயல்பான கூட்டணி. கடந்த காலத்தில் ஜெயலலிதாவும், விஜயகாந்த் இணைந்து தேர்தலில் சந்தித்தார்கள். அப்போது, மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். அதேபோன்று இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும், நானும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். இந்த தேர்தலும் நமக்கு வெற்றியாக அமையும்

வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காலையிலேயே எழுந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஏனென்றால், திமுகவினர் நம்ம ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அதேபோன்று மத்தியில் பாஜகவிற்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 200 இடங்களுக்கு மேல் பாஜகவிற்கு கிடைக்காது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.

எனவே மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அதேபோன்று போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப் பொருளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டாமா..?

மேலும் படிக்க: ஆளுநர் ஆர்என் ரவியை சவுக்கால் அடித்து தீர்ப்பு கொடுத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர் பொன்முடி ஆவேசம்..!!!

அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும், நானும் அமைத்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும், அதற்கு முன்னதாக நடக்கும் உள்ளாட்சி ஊரக தேர்தலுக்கும் முன்னோட்டமாக இருக்கும். எனவே நாம் இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும், எனக் கூறினார்.

முன்னதாக வேன் மூலமாக பிரச்சாரம் செய்ய வந்த அவருக்கு தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் சூடம் ஏற்றி சுற்றி சாலையில் உடைத்து திருஷ்டியை கழித்தனர். மேலும் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் பட பாடல்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், அதற்கு ஏற்றவாறு தொண்டர்களும் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

Views: - 120

0

0