ஹிட்லர் ஆட்சியை நடத்தும் திமுக… நடிகர் விஜய்யை அரசியலுக்கு வருவதை தடுக்கிறதா திமுக..? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 11:37 am
Quick Share

நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் செய்தியாளர்கள் சந்தித்த அவரிடம், திமுகவைச் சேர்ந்த முக்கியபிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலாவது :- ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் யாராக இருந்தாலும், தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சோதனைக்குப் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அதனால், இதெல்லாம் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த விஷயம் வரவேற்கக் கூடியது, என தெரிவித்தார்.

தொடர்ந்து 2024 இல் பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு.?, இன்னும் ஆறு மாத காலம் உள்ளது வழக்கமாக அனைத்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வருகிறேன். நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி வைத்து தேமுதிக நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம், என தெரிவித்தார்

தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு வெடி விபத்தில் அதிகமான உயிர்களுக்கு நடைபெறுவதாகவும், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு.?, இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறோம். தீபாவளி வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனை தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். உயிர்ப்பலி அதிகமாக உள்ளது. அரசு உரிய அதிகாரிகளை நியமித்து, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

கர்நாடகா காவிரி நீர் வழங்குவதில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு?, இது நிச்சயமாக தவறுதான். ஓராண்டு, இரு ஆண்டு அல்ல, எவ்வளவோ காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை.
திமுக, அதிமுக மாறி மாறி வந்தாலும், இந்த நிலை தொடர்ந்து தான் வருகிறது. தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். அவர்கள் எல்லைக்குள் இருந்து வருவதால் கர்நாடகாவுக்கு மட்டும்தான் சொந்தம் என்பது இருக்கக்கூடிய விஷயம் அல்ல.

இதில், மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், என தெரிவித்தார்.

தங்கள் உரிமைகளை கேட்டு போராட்டம் செய்பவர்களை தொடர்ந்து காவல்துறை கைது செய்து குறித்த கேள்விக்கு, தங்கள் உரிமைக்காக போராடக்கூடிய ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைவரையும் இந்த அரசு காவல்துறையை கொண்டு கைது செய்யும் நடவடிக்கை அவர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவிசாய்க்க வேண்டியது. கண்டிக்கக் கூடிய விஷயம், காவல்துறையை வைத்து அடக்கினால் நாம் வெற்றி பெற்று விடலாம் என ஆளுங்கட்சி நினைத்தால், அது தவறு நிச்சயமாக தேர்தல் வரும்போது, ஆளுங்கட்சி எதிர்மறையான காட்சிகளை சந்திக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நான் சில இடங்களில் களங்களில் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்கிறேன். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் காவிரி விவசாயிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என கூறும் அனைவரும் சொல்வது முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி தான். நாங்கள் நிறைவேற்ற கூறுகிறோம் என தெரிவிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னர் தேர்தலுக்குப் பின்னால் ஒரு நிலைப்பாடு என்பது தான் தற்போது உள்ளது. திமுக ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது என நாங்கள் ஏற்கனவே அறிக்கையில் தெரிவித்துள்ளோம். உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கை குறித்த கேள்விக்கு?, இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து, அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும், தாமதமாக நடைபெறுவது வருத்தத்துக்குரிய விஷயம் தான், என தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கான முன்னெடுப்பு நடத்தி வருவதாக கூறி அவருடைய நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தடை விதித்து வருவது அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்ற கேள்விக்கு.? இதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அவர்களிடம் கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள். அவரிடம் கேள்வி கேட்டால் தான், அதற்கான பதில் கிடைக்கும், என்றார்.

இன்று உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது குறித்த கேள்விக்கு?, நிச்சயம் இந்தியா வெற்றி பெற வேண்டும் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகையை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறித்த கேள்விக்கு.? மகளிர் உரிமைத்தொகையில் பெண்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தலின் போது அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இப்போது தகுதி அடிப்படையில் உரிமைத் தொகையை வழங்குவது பெண்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பணம் பெறாதவர்கள் தகுதி இல்லாதவர்களா என்ற ஒரு நிலைப்பாடு உருவாகியுள்ளது. அனைத்து மகளிருக்கும் உரிமை தொகையை கொடுப்போம் என்று தான் ஆட்சிக்கு வந்தீர்கள், அதை அனைவருக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 188

0

0