அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்… வீடியோ ஆதாரத்தை காட்டி திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு!!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 2:26 pm
Quick Share

தேர்தல் விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் மீது, ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை என திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10:40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜக அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார் எனவும், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறி ஆதார வீடியோ காட்சிகளை காண்பித்தார்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!

இது குறித்து இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்த அவர், வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகள் எங்கள் கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார். மேலும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.

இரவு 10.40 மணிக்கு பிரச்சார வாகனத்தில் ஒலி பெருக்கியில் அண்ணாமலை பேசிக் கொண்டு செல்கிறார் என குறிபிட்ட நா.கார்த்திக், அவர் (அண்ணாமலை) எப்படிப்பட்டவர் என்பதற்கு இது சாட்சி என்றார். மேலும், இதேபோல பல இடங்களில் அத்துமீறி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை வேட்பாளராக இருக்கும் போதே சட்டத்தை மீறி செயல்படுகிறார், திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகிறார், இது குறித்து அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்றார்.

மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டத்திற்கு புறம்பாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தது குறித்து புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அவர், இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என தெரிவித்தார். மேலும், பாஜகவினர் மதவெறியை தூண்டி வெற்றி பெறலாம் என மனப்பால் குடிக்கிறார்கள் என விமர்சித்தார்.

அண்ணாமலை பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

தொடர்ந்து பேசிய கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை அமைதியை விரும்பும் நகரம் எனவும், இங்கு ரவுடிசம் எடுபடாது எனவும் தெரிவித்தார். பாஜகவின் சுயரூபம் வெளியே வந்துள்ளது என கூறிய அவர், பாஜகவினர் தோல்வி பயத்தில் வெளிமாநில ஆட்களை ஊடுருவ செய்து கலவரத்தை உருவாக்கலாம் என ஐயம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி வருகின்றனர் எனவும், இவற்றை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், ஆதாரபூர்வமாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். தோல்வி பயத்தில் தேர்தலுக்கு இடையூறு செய்ய பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் வருவதாகவும் கூறினார்.

ஆளுங்கட்சியாக நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறோம் என கூறிய அவர், பாஜகவினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சாதகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என விமர்சித்தார்.

Views: - 126

0

0