கோவைக்கு 100 வாக்குறுதி… 500 நாளில் நிறைவேற்றம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை…!!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 4:38 pm
Quick Share

வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திமுக’தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!

இதனை கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பூ வியாபாரி, ஸ்விகி உணவு விநியோகம் செய்பவர், ஐ.டி ஊழியர், விவசாயிகள், தொழில் முனைவோர் என 12 துறைகளைச் சேர்ந்த நபர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ‘கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். இதில் உள்ள முக்கியமான 100 வாக்குறுதிகளை பதவியேற்று 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறேன். அதில் மிகமுக்கியமான 15 வாக்குறுதிகளை வாசிக்கின்றேன். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் மையங்கள் திறக்கப்படும்.

விமான நிலைய விரிவாக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சர்வதேச விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாற்றப்படும். மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்படும். ஐ.ஐ.எம் (IIM) கல்வி நிறுவனம் கோவையில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், நொய்யல் மற்றும் கௌசிகா நதிகள் புணரமைக்கப்படும்.
கைத்தறி நெசவுத் தொழில் மேம்பாட்டிற்கான பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு சோலார் மின்தகடு பொருத்துவதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் ஆகியவை கோவையில் அமைக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில் செமி கண்டக்டர் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும். நான்கு நவோதயா பள்ளிகள் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் உருவாக்கப்படும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கிளை கோவையில் அமைக்கப்படும்.

250 பிரதமர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்படும். தேசிய முதியோர் நல மருத்துவமனைகள் உருவாக்கப்படும். கோவையில் இருந்து முக்கியமான புராதான இடங்களுக்கு புதிய 10 ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரை செல்பவர்களுக்கான உதவி மையம் உருவாக்கப்படும். புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான மையம், கர்மவீரர் காமராஜர் பெயரில் மூன்று உணவு வங்கிகள் ஆகியன உருவாக்கப்படும்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்… வீடியோ ஆதாரத்தை காட்டி திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு!!!

கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும். அதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோவை சர்வதேச அளவில் தனித்துவமிக்க பகுதியாக உருவாக்கப்படுவதோடு, கோவையில் உள்ள தற்போதைய பிரச்சனைகள் மற்றும் வருங்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், கோயம்புத்தூர் தொகுதியில் மக்கள் மத்தியில் பாஜகவிற்கு இருக்கும் ஆதரவை பார்த்து திமுகவினர் பயந்து வருவதாகவும், அதனால் தன் மீது பொய் வழக்குகளை பதிந்து வருவதாகவும் கூறினார். மேலும், நேற்றைய பிரச்சாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என கூறியவர், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி இல்லாமல் மக்களிடம் பேசுவதற்கு அனுமதி உண்டு எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், எப்பொழுதுமே திமுகவினர் கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனையில் படுப்பது சகஜம் தான். திமுகவிற்கு கோவை பாராளுமன்ற தொகுதிகள் டெபாசிட் கிடைக்காது. தமிழ்நாடு முழுவதும் வன்முறையும் அட்டகாசமும் செய்வதற்கு ஒரு கட்சி பிறந்து இருக்கிறது என்றால், அது திராவிட முன்னேற்ற கழகம். தோல்வி பயத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டார்கள். மத்திய பாஜக தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கின்றோம். அது வந்தவுடன் மாநில தேர்தல் அறிக்கை வேகமாக வெளியிடப்படும்.

பாஜக ஊழல் என கியூ ஆர் கோடு வைத்து திமுகவினர் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது மூளை இல்லாதவர்களாக பார்க்கிறேன். அவர்களை எல்கேஜி சேர்க்க வேண்டும் என்று பார்க்கிறேன். அமித்ஷா சிவகங்கையில் சிறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதுரையில் ரோட் ஷோ வில் கலந்து கொள்கிறார்.தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் பிரச்சாரம் செய்து அதன் பிறகு திருவனந்தபுரத்திற்கு செல்கிறார், என அண்ணாமலை தெரிவித்தார்.

Views: - 118

0

0