கொச்சை சொற்களால் ஆளுநரை மிரட்டிய திமுக நிர்வாகி : அமைச்சர் துரைமுருகன் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 10:41 am
Sivaji Krishnamoorthy - Updatenews360
Quick Share

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி இந்தப் புகாரை அளித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ‘ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Views: - 321

0

0