வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம்.. வீடியோ ஆதாரத்தை அளிக்க தயார்.. பாஜக எம்எல்ஏ வானதிக்கு அமைச்சர் உதயநிதி சவால்..!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 8:36 am
Quick Share

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை போடுவதாக பிரதமர் சொன்ன ஆதாரத்தை அளிக்க தயார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் பகுதி திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :- அதிமுக ஆட்சியை நம்மிடம் கொடுத்த நேரம் கொரோனா சமயம். கருணாநிதி காட்டிய வழியில் அறிவியலின் துணை கொண்டு தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக முன் எடுத்து கொரோனாவிடம் இருந்து முதலமைச்சர் காப்பாற்றினார்.

பத்தாண்டு சீர்கேட்டை மீட்டெடுக்க வேண்டிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இன்று நாட்டில் நம்பர் ஒன் முதலமைச்சராக திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார். திமுக திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடித்து கொண்டு இருக்கின்றன. மகளிர் உரிமை தொகை திட்டத்தை பெண்கள் உளமார வரவேற்கிறார்கள்.

கருப்பு பண விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. மோடி கூறியது உண்மை. 2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதற்கான ஆதாரத்தையும் அளிக்க தயார் என சவால் விடுகிறேன். எனவே நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொய்களை பரப்பி, பொய்களை பேசுவதால் உண்மைகள் பாஜக கண்களுக்கு எப்போதும் தெரிவதில்லை. பாஜகவுக்கு மீண்டும் வாக்களித்தால் ஒட்டு மொத்த இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது, என கூறினார்.

Views: - 234

0

0