‘நியமன ரவி… சாப்பிடுவதற்கு முன்பு இதை மட்டும் மறந்துறாதீங்க… ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக எம்பி பதிலடி…!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 4:00 pm
Quick Share

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது குறித்து திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியிருக்கையில், தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தராக முதல்மைச்சர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு எடுத்துக் கொள்வதையும் ஏற்க முடியாது. இது பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு எதிரானது.

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை. காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியே திராவிட மாடல். ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல். சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கம். ஆளுநர் மாளிகை கணக்கு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்.

தமிழகத்தில் தமிழை தவிர மற்ற மொழிகளை அனுமதிப்பதில்லை. ஆளுநர் ஒன்றும் ராஜா அல்ல ; ராஜ்பவன் என்ற ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற யோசித்து வருகிறேன். காலணியாதிக்கக் காலங்களில் கொண்டுவரப்பட்ட ராஜ்பவன் என்பதற்கு பதிலாக லோக் பவன் (மக்கள் இல்லம்) என அழைக்க விரும்புகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மனிதர்; அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது, என தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து, அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் திமுக எம்பி செந்தில்குமார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நியமன ரவி, ஒன்னும் மாற்ற அதிகாரமும் இல்லை. மாற்றவும் முடியாது. தினமும் ஒரு உண்மையை மட்டும் உங்கள் மனதிற்குள் சொல்லிவிட்டு காலை, மதியம் , மாலை , இரவு உணவை உட்கொள்ளுங்கள். ‘நான் ஒரு தற்காலிக Postman’என்று, இதை செய்தால் பித்தம் தெளியும், உண்மை உரைக்கும் மனசு ஓர் சாந்த நிலை அடையும்,” எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சமூகவலைதளங்களில் திமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 317

0

0