ஆமா, என்கிட்ட 10 ஆயிரம் கோடி இருக்கு… முடிந்தால் என் குடும்பத்தை கூண்டில் ஏற்று பார்க்கலாம்.. அண்ணாமலைக்கு டிஆர் பாலு சவால்..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 9:42 am
Quick Share

தீராத விளையாட்டுப் பிள்ளை அண்ணாமலை என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், 67 ஆண்டுகள் ஒரே கட்சியில் பணியாற்றிய எனக்கு இவருக்கெல்லாம் பதில் சொல்வது வருத்தம் அளிப்பதாக திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மண்டல தலைவர் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிஆர் பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு பேசியதாவது :- யூனிஃபார்ம் சிவில் கோர்ட் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பலம் இருக்கிறது என்று கொண்டு வந்தால் நாட்டில் இருக்கின்ற ஒற்றுமை தன்மையும், சகிப்புத்தன்மையும், மதச்சார்பின்மையும் போகிவிடும் என்று உணராத அரசியல்வாதிகளை என்ன சொல்வது. நான் ஏதாவது பேசிவிட்டால் தலைவர் என்னை கூப்பிட்டு கண்டிப்பார்.

நான் என்ன அண்ணாமலையா..? என்னால் அவரைப் போல் தரக்குறைவாக பேச முடியாது. அப்படி நான் தரக்குறைவாக பேச வேண்டும் என்றால், ஒன்று நான் அண்ணாமலையாக வேண்டும். இல்லையென்றால் அந்தக் கட்சியில் சேர வேண்டும். தம்பி அண்ணாமலை மிகுந்த சங்கடத்தில் மாட்டிக் கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்.

தம்பி அண்ணாமலை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை. அவர் எங்கு சென்றாலும் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார். இது புதிது புதிதாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பதை படிப்பதற்கு தனி டிக்சனரி தேவைப்படும். அவருக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி, எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் இந்த நாட்டை ஒப்படைத்து இருக்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி. இதிலேயே அவர்கள் எவ்வளவு கீழ்த்தனமானவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பிரதமர் ஒரு முழு நேர அரசியல்வாதியை நம்பாமல் ஒரு சாதாரணமான போலீஸ்காரர்களிடம் நாட்டை ஒப்படைத்து இருக்கிறார். ஒருவர் நாட்டின் ஆளுநராக இருக்கிறார். மற்றொருவர் கட்சியின் தலைவராக இருக்கிறார். இது நியாயமா போலீஸ்காரரிடம் என்ன நீதி இருக்கும். நிலைமை எப்படி மாறிவிட்டது என்று நீங்களே கருதிக் கொள்ளுங்கள். சாதாரண ஆளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

67 ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்து பணியாற்றிய எனக்கு இந்த நிலைமை வந்துவிட்டது என மிகவும் கவலைப்படுகிறேன். இப்படி எல்லாம் நான் கவலைப்பட்டதே கிடையாது. பெரிய பெரிய தலைவர்களுக்கு பதில் சொன்ன இயக்கம், தற்போது இவருக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டு, இது போன்று பேசிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் தாம்பரம் பகுதி மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணாமலை என்னிடம் பத்தாயிரம் கோடி இருக்கிறது என்று சொல்லி இருந்தார். ஆமாம் என்னிடம் பத்தாயிரம் கோடி இருக்கிறது. என்ன பண்ணப் போற… பத்தாயிரம் கோடி இருக்கிறது என்றால் எடுத்துட்டு போக போறியா.. அப்படியே இருந்தாலும், ஒவ்வொரு பைசாவும் சட்டப்பூர்வமாக நான் சம்பாதித்து மட்டுமே என்னிடம் இருக்கும். நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். அதைப்பற்றி அவருக்கு பதில் அளித்துக் கொண்டு இருக்க முடியாது.

அரசியல் மேதைகள் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டில் இரண்டு போலீஸ்காரர்களை அமர வைத்து நாட்டை தவறுதலாக வழிநடத்தி வருகிறார்கள். அவர்கள் கட்சியிலேயே மூத்த தலைவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தெரியாத அரசியல் அண்ணாமலைக்கு தெரிந்து விட்டதா என்ன..? பாஜகவை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களிடம் நான் பேசிக் கொண்டு சென்றேன். அப்போது அவர்களிடம் கட்சியில் இது போன்று நடக்கிறது என்று கேட்டதற்கு, அவர்கள் சிரிக்கிறார்கள். சிரிப்பதை தவிர அவர்களால் வேறு எதுவும் பதில் சொல்ல முடியாது.

அண்ணாமலைக்கு மானம்,ரோஷம் இருந்தால் என் குடும்பத்தை கூண்டில் ஏத்து பார்க்கலாம். இப்படி எல்லாம் பேசாதவன் ஏன் பேசுகிறேன் என்று பார்த்தால், எப்படி எல்லாம் ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைப்பது நல்லது. என்னால் நிறைய பேச முடியும். ஆனால் கோபம் வந்தால் தான் பேசுவேன். தற்போது எனக்கு கோபம் வரவில்லை. ஏனென்றால் ஒரு சாதாரண ஆள், ஒரு தீராத விளையாட்டு பிள்ளை பேசும்பொழுது, என்னால் என்ன பேச முடியும், என்றார்.

Views: - 266

0

0